நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர், ஜுன் 13- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 16 ஆவது வார்டில் ஜோதிபுரம், டாக்டர் கருப்பையா நகர், ஸ்டேட் பாங்க் காலனி, சிதம்பரம் சாலை, நேரு நகர், கே.வி.எம் நகர், எஸ்.எஸ்.நகர், சீனிவாசநகர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த குடிநீரானது போதுமானதாக இல்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு மனுக்கள் அளித்துள்ளனர். அந்தப் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நீரோட்டங்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அந்த இடமானது நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான இடம் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, குழாய் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் ஜெயங்கொண்டம் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி தலைவர் சுமதி சிவக்குமார், நகராட்சி ஆணையர் அன்புச்செல்வி உள்ளிட்டோர் மாற்று இடத்தை தேர்வு செய்து ஆழ்துளை கிணறு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.