மாற்றுத் திறனாளிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வலியுறுத்தி எம்.பி,யிடம் மனு
தஞ்சாவூர், ஆக. 18- மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைகளை பாதுகாக்க வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர உதவித் தொகையை ஒன்றிய அரசு குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுடைய பல்வேறு கோரிக்கைகளுக்காக, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திட வேண்டும் என, தமிழகம் முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப் பட்டது. அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டக் குழு சார்பில், ஞாயிறன்று தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலியை, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் கே.மோகன், மாநகரச் செயலாளர் சி.ராஜன், ஆயிராசு ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.