ஜூன் 17 திண்டுக்கல்லில் பஞ்சாலைத் தொழிலாளர் மாநில மாநாடு
திண்டுக்கல், மே 28 - திண்டுக்கல்லில் வருகிற ஜூன் 17ஆம் தேதி பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) 9வது மாநில மாநாடு நடைபெறுகிறது. வரவேற்புக்குழு அமைப்பு சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்தில், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. வரவேற்புக்குழுவின் தலைவராகவும், சி.பி.ஜெயசீலன் செயலாளராகவும், கஸ்தூரி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.அசோகன், மாநில பொருளாளர் சக்திவேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.பி.ஜெயசீலன், பொருளாளர் தவக்குமார், பஞ்சாலைச் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணி, பொருளாளர் கஸ்தூரி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஆர்.பால்ராஜ், ஏ.தனசாமி, சி.பாலச்சந்திரபோஸ், பி.பாலசுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தலைவர்கள் சிஐடியு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகமான வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், அகில இந்தியச் செயலாளர் ஆர்.கருமலையான், பஞ்சாலைச் சம்மேளனத் தலைவர் எம்.சந்திரன், பொதுச் செயலாளர் எம்.அசோகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். முக்கிய கோரிக்கைகள் வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எம்.அசோகன் பேசுகையில், “தினசரி கூலியாக ரூ.544 வழங்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.26,000 வழங்க வேண்டும். ஈ.எஸ்.ஐ, பி.எஃப் பிடித்தம் செய்ய வேண்டும். பஞ்சாலைத் தொழிலாளர்கள் வசிக்கும் கிராமங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும். எல்லா பஞ்சாலைகளிலும் சிஐடியு சங்கத்தைத் தொடங்க வேண்டும்” என்று தெரிவித்தார். 9 அம்சக் கோரிக்கைகள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்படும் 9 அம்சக் கோரிக்கைகள்: * பஞ்சாலை உள்ளிட்ட ஜவுளித் தொழில்களைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். *தமிழ்நாடு அரசு பருத்திக் கழகம் அமைக்க வேண்டும். *பஞ்சாலைகளுக்குத் தேவையான பஞ்சு நியாயமான விலையில் கிடைக்க வேண்டும். *மாத ஊதியமாக ரூ.26,000 வழங்க வேண்டும். *பயிற்சியாளர்களுக்கு தினசரி கூலியாக ரூ.544 வழங்க வேண்டும். *மூடப்பட்ட அரசுப் பஞ்சாலைகளைத் திறந்து இயக்க வேண்டும். *பஞ்சாலைகளில் சுகாதாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிவறை, உணவகம் ஆகிய வசதிகளை மேம்படுத்த வேண்டும். *பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் விசாகா புகார் பெட்டிகள் அமைக்க வேண்டும். *1995ஆம் ஆண்டு ஈ.பி.எஃப் சட்டத்தின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 வழங்க வேண்டும். தினக்கூலி, ஒப்பந்தக் கூலி, அவுட்சோர்சிங் போன்ற உழைப்புச் சுரண்டலுக்கு முடிவுகட்டவும், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊதிய உயர்வு இல்லாத பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிக் கமிட்டி அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.