tamilnadu

img

விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் 2025 3 ஆவது சுற்றில் கசட்கினா

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் தொடரின் 128ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 17ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் முன்னணி வீராங்கனையான கசட்கினா, தரவரிசையில் இல்லாத பிரான்ஸின் லியோலியாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கசட்கினா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 

கசட்கினா ஆஸ்திரேலியர் கிடையாது

பிரெஞ்சு ஓபனில் 3ஆவது சுற்றுக்கு முன்னேறிய கசட்கினா ஆஸ்திரேலியர் கிடையாது.  அவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஆவார். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யர்கள் மற்றும் பெலாரஸியர்கள் (ரஷ்யா ஆதரவு நாடு) டென்னிஸ் உலகில் நாட்டின்  பெயர் மற்றும் கொடிகள் இல்லாமல் பங்கேற்று வருகின்றனர். இதனால் தங்கள் நாட்டிற்கு  கிடைக்கும் பெயர், புகழ் மறைக்கப்படுகிறது என ரஷ்ய வீரர் - வீராங்கனைகள் குற்றம்சாட்டினர். மேலும் ரஷ்யா மற்றும் சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்திடம் ரஷ்ய  வீரர் - வீராங்கனைகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஆனால் ரஷ்யா  மற்றும் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் தான் கசட்கினா ஆஸ்திரேலிய குடிமகளாக மாறியுள்ளார்.

சிங்கப்பூர் ஓபன் 2025 அரையிறுதியில் இந்திய ஜோடி

96 ஆண்டுகால பழமையான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 74ஆவது சீசன் மே 27ஆம் தேதி தொடங்கியது.  சிங்கப்பூர் சிட்டியில் (சிங்கப்பூர் தலைநகர்) நடைபெற்று வரும் இந்த தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வரும், இந்தியாவின் ராங்கி ரெட்டி - சிராக் செட்டி ஜோடி வியாழக்கிழமை அன்று நடைபெற்ற 2ஆவது சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர் ஜோடியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.  தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ராங்கி ரெட்டி - சிராக் செட்டி ஜோடி, மலேசியாவின் கோ பெய் - இசுதீன் ஜோடியை எதிர்கொண்டது. தொடக்க புள்ளிகள் முதலே அதிரடியாக விளையாடிய ராங்கி ரெட்டி - சிராக் செட்டி 21-17, 21-15 என்ற புள்ளிக்கணக்கில் கோ பெய் - இசுதீன் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

“இங்கிலாந்து 400”

3 ஒருநாள், 3 டி-20 போட்டிகளில் பங்கேற்பதற்காக மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்கள் குவித்தது. 300 பந்துகளுக்கு 401 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 26.2 ஓவரில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 238 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 2ஆவது ஒருநாள் போட்டி ஜூன் 1ஆம் தேதி கார்டிப் நகரில் நடைபெறு கிறது.

இன்று ஐபிஎல் ஆட்டம் கிடையாது

ஞாயிற்றுக்கிழமை அன்று  “குவாலிபையர் 2” ஆட்டம் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் : ஜூன் 3  முதல் அணியாக இறுதிக்கு பெங்களூரு அணி முன்னேறியுள்ளது.  “குவாலிபையர் 2” ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, பெங்களூரு அணியுடன் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும்.