கோவி.பால.முருகு
எத்தொழில் செய்யினும் மேன்மை-அதை
ஏளனம் செய்வது கீழ்மை!
அத்தொழில் தன்னில் நேர்மை-நீ
அடைவாய் புகழின் பெருமை!
செருப்பு தைக்கும் தொழிலால்--காலுக்கு
சேர்ப்பார் கலையின் எழிலால்!
மேலணி ஆடை நெய்வார் -அவர்
மேலான தொழிலைச் செய்வார்!
சலவை செய்யும் தொழிலாம் -அதைச்
செய்திடும் வாழ்க்கை எழிலாம்!
தலைமுகம் வளரும் மயிரை -மழித்துத்
தருவார் அழகின் உயிரை!
ஈக்கள் மொய்க்கும் கழிவு- கையால்
எடுப்பவர் வியர்வை உயர்வு !
சாக்கடைத் தூய்மைச் செய்வார்-அவர்
சகலரும் போற்றச் சிறப்பார்!
குப்பை பொருக்கி வாழும்-மக்கள்
குடல்பசி அதனால் தீரும்!
அப்பணி தன்னால் ஊரும்-நல்ல
அழகுறும் நோய்பிணி தீரும்!
நேர்மை கொண்ட உழைப்பு- எதிலும்
நேரா திருக்கும் இழப்பு! !
பார்வை தன்னில் உயர்வாய்-அவர்
பற்றிய தொழிலைக் காண்பாய்!