சாதி மறுத்திடு பாப்பா! - நாளும்
சண்டை தரும்மதம் வேண்டா
ஓதி உரைத்தவர் சொல்லை - நீயும்
உள்ளம் பதித்திடு பாப்பா
வஞ்சகர் சூழ்ச்சியர் பாப்பா - அவர்
வாலை நறுக்கிடு பாப்பா
அஞ்சுவ தஞ்சுதல் வேண்டும் - ஆனால்
அச்சமே வாழ்வென வேண்டா!
நெஞ்சுரம் வேண்டுமே பாப்பா - நெஞ்சில்
நேர்மை வளர்த்திடு பாப்பா
பஞ்சென மென்மையும் வேண்டும் - பகை
பார்த்திடின் உறுதியும் வேண்டும்.
கெஞ்சுதல் பேதைமை பாப்பா - உன்
கீழுளார் தாங்குதல் வேண்டும்!
நஞ்செனச் சொற்களும் வேண்டா - நல்லோர்
நட்புதான் உனக்கரண் பாப்பா!
கற்றவர் போற்றிடு பாப்பா - அவர்
காட்டிடும் பாதை செல் பாப்பா!
பெற்றவர் பேணுதல் வேண்டும் - நாடு
பெற்றவர் தம்மினும் மேலாம்!
நாட்டைக் கெடுப்பவர் கண்டால் - உன்
நரம்பு துடித்திடல் வேண்டும்!
கேட்டைத் துடைத்தெறி பாப்பா - நாளை
கிழக்கு வெளுத்திடும் பாப்பா!