tamilnadu

img

அச்சமே வாழ்வென வேண்டா... - சின்ன மணல்மேடு த.இராமலிங்கம்

சாதி மறுத்திடு பாப்பா!  - நாளும்
சண்டை  தரும்மதம் வேண்டா
ஓதி உரைத்தவர் சொல்லை - நீயும்
உள்ளம் பதித்திடு பாப்பா

வஞ்சகர் சூழ்ச்சியர் பாப்பா - அவர்
வாலை நறுக்கிடு பாப்பா
அஞ்சுவ தஞ்சுதல்  வேண்டும் - ஆனால்
அச்சமே வாழ்வென வேண்டா!

நெஞ்சுரம் வேண்டுமே பாப்பா - நெஞ்சில்
நேர்மை வளர்த்திடு பாப்பா
பஞ்சென மென்மையும் வேண்டும் - பகை
பார்த்திடின் உறுதியும் வேண்டும்.

கெஞ்சுதல் பேதைமை  பாப்பா - உன்
கீழுளார் தாங்குதல் வேண்டும்!
நஞ்செனச் சொற்களும் வேண்டா - நல்லோர்
நட்புதான் உனக்கரண் பாப்பா!

கற்றவர் போற்றிடு பாப்பா - அவர்
காட்டிடும்  பாதை செல்  பாப்பா!
பெற்றவர் பேணுதல்  வேண்டும் - நாடு
பெற்றவர் தம்மினும்  மேலாம்!

நாட்டைக் கெடுப்பவர் கண்டால் - உன்
நரம்பு துடித்திடல் வேண்டும்!
கேட்டைத் துடைத்தெறி பாப்பா - நாளை
கிழக்கு வெளுத்திடும் பாப்பா!