புதிய தார்ச் சாலை அமைக்கக் கோரி சிபிஎம் மறியல்
திருவாரூர், ஜுன் 3- திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள திருவாரூரில் இருந்து அலிவலம், தப்பளாம்புலியூர், புதுப்பத்தூர் வழியாக ஆந்தகுடி வரை செல்லும் தார் சாலை மரணக் குழியாக அமைந்துள்ளது. இச்சாலையை உடனடியாக புதிய தார்ச்சாலையாக அமைத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தப்பளாம்புலியூர் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கோமதி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள், பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரவீன் குமார் ஆகியோர் சிபிஎம் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடனடியாக பெரும் பள்ளமாக உள்ள பகுதிகளில் ஜல்லி கற்கள் கொண்டு சீர் செய்து, மேற்பரப்பு(பேட்ஜ் ஒர்க்) பணியை மேற்கொள்வதாகவும். ஒரு மாத காலத்தில் புதிய தார்ச் சாலையை அமைத்துத் தருவதாகவும் உறுதியளித்தனர். அதன் அடிப்படையில், சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தில், சிபிஎம் திருவாரூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா, மூத்த தோழர்கள் பி. மாதவன், என். இடும்பையன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் வர்க்க வெகுஜன அரங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள், அலிவலம், தப்பளாம்புலியூர், புதுப்பத்தூர் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.