நர்சிங்பூர், மே 10- மத்தியப்பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட த்தில் மே-9 ஆம் தேதி இரவு நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்ததில் ஐந்து புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் பலியாயினர். 13 பேர் காயமடைந்தனர். ஹைதராபாத்தில் இருந்து ஆக்ரா மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரியில் 15 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மற்றும் எட்டா மாவட்டங்களுக்கு பயணித்துள்ளனர். மே 9-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் லாரி நர்சிங்பூரிலிருந்து 30 கி.மீ தூரத்தில் முங்வானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் சிக்கி ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்ததும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், காயமடைந்தவர்களுக்கு முழுமையான சிகிச்சையை உறுதி செய்வதற்காக மூத்த அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் சவுகான் தெரிவித்துள்ளார்.