tamilnadu

குடியிருப்பு பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டும் புலியூர் பேரூராட்சி நிர்வாகம்  கரூர் ஆட்சியரிடம் மக்கள் புகார் மனு

   கரூர்: கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி கோவில்பாளையம் ஊர் மக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவில்பாளையத்தில் பத்து வருடங்களாக 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. புலியூர் பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை கொண்டு வந்து இந்த குடியிருப்பு பகுதியில் கொட்டுகின்றனர்.  கொட்டும் குப்பைகளில் அதிகளவு உள்ள இறைச்சிக் கழிவுகளால்  துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்களுக்கு தொற்று நோய்கள் பரவுகின்றன. இறைச்சி கழிவுகளை தின்பதற்காக தெரு நாய்கள் அதிகளவில் வந்து அப்பகுதியில் சுற்றுகின்றன.  இதனால் ஆடு, மாடு, மனிதர்களையும் கடித்து விடுவதாகவும், அதனால் பொதுமக்கள், குழந்தைகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.  எனவே குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதுகுறித்து ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.