சவால்களும் துயரமும் ஒன்றினை ஒன்று விஞ்சிக்கொண்டிருக்கும் இந்த நாள்களில் உடனடியாக உங்களின் கவனத்துக்குச் சிலவற்றைக் கொண்டுவரவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
விமர்சிக்கவோ, வேதனைப்படுத்த வோ எண்ணி அல்ல. உண்மையை உங்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் தீர்வினை நோக்கி விரைவதற்கான முயற்சியே. முகம்தெரியாத அந்தக் கிருமியை முன்னேறவிடாமல் தடுக்க முடியும் என்ற மிச்சமிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையிலே இதனை எழுதுகிறேன்.
1 "உண்மையைச் சொல்லுவதும் பிற தேசத்தில் நிகழ்ந்த மருத்துவ நெருக்கடி அனுபவங்களை பகிர்தலும்" மட்டுமே நம்மைக் காக்கும் என்பது இங்கி லாந்து, அமெரிக்க முன்னோடி மருத்துவ ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.
2 இந்தியா ஏன் இன்னமும் தீவிர சோதனைத் திட்டத்துக்குள் இறங்க மறுக்கிறது? "Test, test, test" இதுதான் தீர்வு என பல நாடுகள் சொன்ன பின்னரும் இங்கு ஏன் பலருக்கும் சோதனை அவசியமில்லாதது போன்ற நிலை? தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நோயை முடக்கியது சோதனையால்தான் என்கிற சேதி உங்களை எட்டவில்லையா?
3 நமக்கு அருகிலுள்ள நாடு 10,00,000 பேருக்கு 6800 பேரினை சோதனை செய்யும்போது நாம் வெறும் 18 பேரைத்தான் சோதிக்கின்றோம். ஆரம்பத்தில் ICMR அனைவருக்கும் 'சோதனை தேவையில்லை' என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இப்பொழுது அது 'அதிகம் பேருக்கு சோதிக்கலாம்' என்ற நிலைப்பாட்டிற்கு வந்த பின்னரும் போதிய அளவு டெஸ்ட் கிட் வந்த பின்னரும் ஏன் இன்னும் தாமதம்.
4 ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இந்தியாவில் "25 கோடிமக்கள் தொற்றுப் பெறுவர். 25 இலட்சம் பேர்வரை நோயுறலாம்; மருத்துவம் தேவைப்படலாம்" என்கிறது. நம்மிடம் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகள், உபகரணங்கள் ஆகிய எந்த ஒன்றிலும் இதை மீட்டெடுக்கும் எண்ணிக்கை இல்லையே. என்ன செய்யப்போகிறோம்?
5 பிற நோய்களில் கவனம் குறைவதும், அந்த நோய்களுக் கான புற நோயாளி சிகிச்சை நிலை யங்கள் மூடப்படுவதும் எவ்வளவு ஆபத்து? நமது நாட்டில் காய்ச்சலில் ஏற்படும் மரணத்தைவிட வாழ்வியல் நோயில் ஏற்படும் மரணங்கள்தானே நான்கு மடங்கு அதிகம்?
6 தனியார் மருத்துவமனைகள் இன்னமுமே முன்வர தயங்கித் தடுமாறுவதை உணர முடிகிறது. நீங்கள் தானே அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்த மட்டில் 1750 வெண்டிலேட்டர்கள் அரசிடம் என்றால், 465 தனியாரிடம் உள்ளன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பலமும் கட்டமைப்பும்கொண்ட தனியார் மருத்துவமனைகளை கொரா னோவுக்கு எதிரான அரசின் செயல்திட்டத் துக்குள் கொண்டுவர வேண்டாமா?
7 ஆயுஷ் துறையினரிடம் பேசியுள்ளீர்கள். அவர்கள் பரிந் துரைகளை உடனடியாக நடைமுறைப் படுத்துங்கள். சீனம் வுகானுக்கு மட்டும் 2000 சீனமுறை மரபு மருத்துவர்களை அனுப்பியதும் அவர்களது QPD கசாயம் முதலுதவி செய்ததும் பதிவாகி உள்ளதே, நிலவேம்போ, கபசுர குடிநீரோ அவர்கள் சொல்வதை அறிஞர் கூட்டத்தைக் கொண்டு ஆலோசித்து நாடெங்கும் ஊற்றி நம்பிக்கையைக் கொடுங்கள். வலியுடன் காத்திருக்கும் கூட்டத்துக்கு அக்கசாயம், நோய் எதிர்ப்பாற்றலை மட்டு மன்று பெரிய உளவியல் உறுதியையும் சேர்த்தல்லவா தரும்?
8 முன்வரிசைக் காவலர்களாய் உள்ள 7 இலட்சம் மருத்துவர் களின் எண்ணிக்கை பத்தாது என்றால் 2.25 இலட்சம் ஆயுஷ் மருத்துவர்களை யும் சேர்த்து முதல் நிலை பாதுகாப்பிற்கு நிறுத்தலாமே!
9 அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீனா ஜனாதிபதி ஜீ ஜின்பிங் உடன் நீண்ட உரையாடலை நடத்திய தாகவும், இந்த வைரஸ் பற்றிய வலுவான புரிதலை சீனா வைத்திருப்பதாகவும் அந்த நாட்டோடு இணைந்து பணியாற்று வோம் என தெரிவித்துள்ளார். சீனாவின் அனுபவங்களை நாமும் ஏன் பரிமாறிக் கொண்டு இந்தியாவில் பயன்படுத்தக் கூடாது.
10 நான்கு மணிநேர அவ காசத்தில் ஊரடங்கை அறி வித்து விட்டீர்கள். எந்த முன்னேற்பாட் டினையும் அரசின் எந்த துறையும் செய்திராத பொழுது, தனிமனிதன் என்ன செய்திருக்க முடியும்? உங்கள் அமைச்சகத்தில் உள்ள வாகன ஓட்டுநர்களின் குடும்ப உறுப்பினர்கள் எங்கெங்கு சிக்கினார்கள் என்பதைக் கேட்டாலே போதுமே? நிலமையின் விபரீதம் முழுமையும் புரியும். தில்லியின் ஆனந்த விகாரிலும் காசர்கோட்டின் தொழிற்கூடத்திலும் ஶ்ரீபெரும்புதூரின் ஊர் விளிம்புகளிலும் சொந்த ஊர்க்கு எப்படித் திரும்புவது என விழிபிதுங்கி ஒட்டிய வயிறுடன் இலட்சக்கணக்கானோர் நிற்கின்றனரே. ஒட்டிய வயிற்றில் ஒருவேளை அந்த பாதகக் கிருமியும் ஒட்டியிருந்தால் இந்த பரவல் தடுப்பு உத்தியே பாதாளத்துக் குப் போய்விடுமே! உங்கள் ஆலோச னைக்குழு என்ன செய்யப்போகின்றது?
11 நாற்பத்தி ஐந்து கோடி இந்தியர்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். அவர்க ளின் கால்களை வயிற்றோடு இறுக கட்டும் முடிவை நீங்கள் அறிவித்தபோது, அது ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி எத்தனை நூறு கேள்விகளுக்கு உங்களின் அமைச்சகம் விடை கண்ட றிந்திருக்க வேண்டும். ஆனால் எந்த விடையையும் நீங்கள் இன்றுவரை சொல்லவில்லையே. காட்டுத்தீ எரியத்தொடங்கும் போது மெளனம் எனும் காற்று நெருப்பை அணைக்காது; அதிகப்படுத்தவே செய்யும்.
12 தினம் முன்நின்று விஷயங்க ளைப் பகிரவேண்டிய அரசின் முதன்மை நலவாழ்வுச் செயலரும் மருத்துவ அமைச்சரும் ஓரிரு மணித் துளிகளேனும் வெற்றுச் சொற்களைக் கோர்த்து பேசி நகராமல் விவரங்களை யும் வியூகங்களையும் திடமாய்ப் பேசி மக்களை நித்தம் பாதுகாப்பாய் அரவணைக்க வேண்டாமா? இவையெல்லாம் எதிர்கட்சி உறுப் பினரின் கேள்விகளல்ல, கண்ணுக்குத் தெரியாத அந்த வைரஸ் சமூகத்தில் உரு வாக்கி க்கொண்டிருக்கும் கேள்விகள். லட்சுமண ரேகையை மதிக்க அண்ணனும் தம்பியும் மதினியும் மிச்சமிருக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் எழும் கேள்விகள்.