திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் ஆகியோர் வியாழனன்று (நவ.21) அறிவாலயத்தில் சந்தித்துப்பேசினர். அப்போது திமுக நிர்வாகிகள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.
கே.பாலகிருஷ்ணன் பேட்டி
சென்னை, நவ.21- உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் மக்களவைத் தேர்தலைப் போல் அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். சென்னை அண்ணா அறிவா லயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டா லினை வியாழனன்று (நவ.21) சந்தித்துப் பேசிய பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அதிமுக அரசு கடந்த 3 ஆண்டுகளாக, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு வந்து கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல கட்டப்போராட்டங்கள் நடத்தி உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று வற்புறுத்திய பிறகும், இன்னமும் கூட தேர்தல் நடத்துவார்களா இல்லையா என சந்தேகம் தான் எழுந்துள்ளது. அவசரச் சட்டம் மூலம் மாநகராட்சி மேயர், நகராட்சித்தலைவர், பேரூராட்சி தலை வர் ஆகியோர் நேரடியாக தேர்வு செய்வார்கள் என்று அறிவித்து வந்த அதிமுக அரசு திடீரென புதனன்று (நவ.21) இரவு அவசரச்சட்டத்தை பிறப்பித்து மறைமுகத்தேர்தல் என்று அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலைப் போல் உள்ளாட்சித் தேர்த லிலும் அதிமுக மற்றும் அதன் கூட் டணி கட்சிகளை தோற்கடிக்க திமுக தலைமையிலான தோழமைக் கட்சி களோடு தொகுதி உடன்பாடு செய்து கொள்வது என தீர்மானித்துள்ளோம். அந்த முடிவை அதிகாரப்பூர்வமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளோம். தேர்தல் நடந்தால் திமுக தலைமை யிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணி நிச்சயம் படு தோல்வி அடையும். எனவே தான் மறைமுகத்தேர்தலை நடத்த முயற்சிக் கிறார்கள். கூட்டுறவுத்தேர்தல் போல் அதிகாரிகளின் உதவியுடன் முறை கேடுகள் செய்து உள்ளாட்சி அமைப்பு களை கைப்பற்றிவிடலாம் என்று ஆளும்கட்சியினர் கருதுகிறார்கள். தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு மாவட்ட அளவில் பேசி இடங்களை முடிவு செய்வோம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.