tamilnadu

img

செல்லாத வாழ்க்கை - வரத.ராஜமாணிக்கம்

படலை விலக்கிக் கொண்டு உள்ளே வந்த மனிதன் மாயன் என்பது அருகில் வந்ததும் தான் கிழவிக்கு புலப்பட்டது. மருமகன் என்பதால் மேலில் விலகி இருந்த முந்தானைச் சேலையை அனிச்சையாய் இழுத்து மூடி கிழவி மரியாதை செய்தாள். திண்ணையில் அமர்ந்த மாயன் குனிந்து கைகளால் முகத்தை மூடி உடம்பு குழுங்க அழுததைப் பார்த்து கிழவி அதிர்ச்சியுற்றாள். அறுவைச் சிகிச்சைக்காக உயிர் போகும் அவசரத்தில் மகள் முருகாயி காத்திருக்கிறாள் என்பதை அறிந்து பெற்ற வயிறு கிழவிக்கு பற்றி எரிந்தது. தனியார் மருத்துவமனை இருபத்தைந்தாயிரம் ரூபாய் முன்பணம் கட்டினால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறிய விபரத்தை மாயன் கிழவியிடம் சொல்லிப் புலம்பினான். கிழவியின் முகம் தெளிவானது. “கவலப்படாதே எங்கிட்ட பணம் இருக்கு எடுத்துத் தர்றேன் கொஞ்சம் பொறு” என்று கிழவி சொன்னதும். மாயனுக்கு ஆச்சர்யமாகவும், ஆறுதலாகவும் இருந்தது.

கிழவி, கூரை முகட்டில் சொருகி வைத்திருந்த துணிச் சுருளை எடுத்து மருமகனிடம் கொடுத்தாள், “கூலி நாழிக்குப் போய் கொஞ்சம், கொஞ்சமாய் வாயக்கட்டி வயத்தக் கட்டி சேத்து வச்ச காசு, புள்ளகுட்டிகளுக்கு ஆகும்னு பத்திரமா வெச்சிருந்தேன். எம்பொண்ண எப்படியாவது பொழைக்க வச்சிருயா” என கை கூப்பி கண்ணீர் விட்டு அழுதாள். மாயன் அவசரமாக துணிச்சுருளைப் பிரித்து பணத்தை எண்ணினான். மொத்தம் இருபத்திரண்டாயிரம் இருந்தது. அத்தனையும் பழைய ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்.... ஊர்த்தலையாரி பேச்சை கேட்டு, மாயன் உள்ளூர் பேங்க் மானேஜரைப் போய் பார்த்தான். “எல்லாம் செல்லாத நோட்டா.. இவ்வளவு நாளா, எங்க மறச்சு வச்சிருந்தீங்க, இன்னும் எவ்வளவு பணம் வச்சிருக்கீங்க” என கிரிமினல் குற்றவாளியைப் போல மாயனை விசாரித்தவர் “இதெல்லாம் அரசு கணக்குப்படி கறுப்பு பணம் வெளிய தெரிஞ்சதுன்னா போலிஸ் கேஸாயிரும்” என மாயனை எச்சரித்தார். கைவிட்டு போகும் மனைவியை நினைத்து மாயனுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.