மாணவர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று வெளிப்படையாக ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெறும் ஜிஆர்டி பள்ளிக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை அவிநாசி சாலையில் ஜி.ஆர்.டி பப்ளிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மற்றும் கலவரத்தை தொடர்ந்து பல பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, ``எங்கள் பள்ளியின் உடைமைகள் மற்றும் எந்தவொரு நபருக்கும், இழப்பு அல்லது காயம் தொடர்பாக எந்த உரிமை கோரலையும் செய்ய மாட்டோம் என ஒப்புக்கொள்கிறேன். மாணவர்கள் பள்ளியின் காவலில் இருக்கும்போது ஏதாவது பிரச்னை அல்லது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன்.” என பெற்றோரிடம் ஓர் இழப்பீட்டு பத்திரத்தில் (Indemnity Bond) கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிவருவதாகப் புகார் எழுந்திருக்கிறது.
கையெழுத்து போடவில்லை என்றால், மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொண்டு செல்லுமாறு வற்புறுத்துவதாகவும் பல மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து அந்தத் தனியார் பள்ளி நிர்வாகம், ``கோவையில் உள்ள பல பள்ளிகள் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றன. அந்த ஒப்பந்த நகலை வழங்கியது நாங்கள்தான். ஆனால் கையெழுத்து போடச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்று விளக்கமளித்திருக்கிறது.
இது குறித்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி, ``பள்ளியில் இருக்கும்போது மாணவர்களுக்கு அந்தக் கல்வி நிறுவனம்தான் முழுப்பொறுப்பு. இப்படி கையெழுத்து வாங்குவதெல்லாம் எந்த விதிகளிலும் இல்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்நிலையில் இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய போக்கை வன்மையாக கண்டித்துள்ளது. மேலும் உடனடியாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்குவதை கைவிட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்படும் இந்தப் பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்படும் இந்தப் பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.