tamilnadu

img

இந்தியா முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டால்  தான் தொழிலை துவங்க முடியும் பம்புசெட் உற்பத்தியாளர்கள் கவலை

கோவை, மே. 1 -தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட குஜராத், மகாராஷ்டிராவில் இருந்து பம்புசெட் தயாரிக்க மூலபொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இந்தியா முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் தான் தொழிலை துவங்க முடியும் என பம்பு செட் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள், பஞ்சாலைகள், சிறு,குறு தொழில்நிறுவனங்கள், கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், பைப் தயாரிக்கும் நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனையாகின்றன. பம்புசெட் உற்பத்தியில் இந்தியாவிற்கே சிறந்த மையமாக கோவை உள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சுமார் 3 ஆயிரம் உள்ளது. இதில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் பொருளாதாரம் பாதிக்கும் என்ற போதிலும் உயிர் வாழ்வது முக்கியம் என்ற அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை கோவையில் உள்ள தொழில்துறையினர் முறையாக பின்பற்றி வருகின்றனர்.  இதனால் இதுவரை பம்புசெட் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் துறையில் மட்டும் ரூ.1500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக  தொழில்துறையினர் தெரிவித்தனர். மேலும், மே 3 ம் தேதி பிறகு இந்தியா முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மட்டுமே கோவையில் பம்புசெட் உற்பத்தி தொழில் துவங்க முடியும் என்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க  தலைவர் மணிராஜ் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கோவையில் தயாரிக்கும் பம்புச்செட் மற்றும் உதிரிபாகங்கள் இந்தியா முழுவதும் விற்பனையாகும். 

பம்புசெட் உற்பத்திக்கு 75 சதவீதம் மூலப்பொருட்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தான் வருகின்றன. ஊரடங்கு தமிழகத்தில் தளர்த்தப்பட்டாலும் கூட தொழில் துவங்குவதில் சிக்கல் உள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரி ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும். பச்சை மண்டலமாக அனைத்து பகுதிகளிலும் மாற வேண்டும். இல்லை என்றால் மூலப்பொட்கள் இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாது. அதேபோல் ஊரடங்குக்கு முன் உற்பத்தி செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பம்புசெட்கள் விற்பனையானல் தான் அதற்கான பணம் கிடைத்து மீண்டும் தொழிலை துவங்க முடியும். உற்பத்தியே துவங்கினாலும் நாடு முழுவதும் விவசாய தேவைக்களுக்காக  பம்புசெட்டுகளை கொண்டு செல்ல போக்குவரத்து தேவை. எனவே இந்தியா முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படும் போது தான் தொழிலை துவங்க முடியும். மாநில அரசு சார்பாக குறைந்தது 3 மாதம் காலம் மின்சார கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து வகை கடன்களையும் கட்ட 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.