tamilnadu

img

விஷ வாயு தாக்கி ஒருவர் பலி - இருவர் கவலைக்கிடம் 


கோவை, ஏப்.27-
கோவையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலியான  நிலையில் ,இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோவை பீளமேடு அருகே உள்ள ஹட் கோ காலனி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 72) .  இவரது மனைவி பத்மாவதி (55 ) . இவர்களுக்கு பாலாஜி (49 )முரளி ( 45) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர் .இவர்கள் 2 பேரும் தனது தாய் தந்தையுடன்  வசித்து வந்தனர் முரளி கோவையில் உள்ள ஒரு தனியார் வாட்ச் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். ஞாயிறன்று  இரவு வழக்கம்போல வீட்டில்  தூங்க சென்றனர். இதன் பின் அதிகாலை 2 .30 மணி அளவில் ஸ்ரீதர் கழிவறைக்கு சென்றார். அப்போது விஷவாயு தாக்கி அங்கேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதன் பின் நீண்ட நேரமாகியும் தந்தை திரும்பி வராததால் அவரை தேடி அவரது இரண்டாவது மகன் முரளி கழிவறைக்கு சென்றார் . அப்போது அவரும் அங்கேயே மயங்கி விழுந்தார். தந்தை மற்றும் தனது தம்பி நீண்ட நேரமாக திரும்பி வராததால் சந்தேகமடைந்த  பாலாஜி, கழிவறைக்கு சென்று பார்த்த நிலையில் அவரும் அங்கேயே சுருண்டு விழுந்தார்.  இதனைப் பார்த்த பத்தமவதி அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு  தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த ஸ்ரீதர், முரளி மற்றும் பாலாஜி ஆகியோரை மீட்டனர். ஆனால், அப்போது பாலாஜி உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. இதன் பின் மற்ற இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர் .  அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.