கோவை, நவ.20- ஓலா நிறுவனம் முறையாக கமிஷன் மற்றும் போனஸ் தராததை கண்டித்து கோவையில் ஓட்டுநர் ஒருவர் தற் கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த பிரசாத் என்பவர் தனது காரை ஓலா நிறுவனத்துடன் ஒப் பந்தம் செய்து வாடகைக்கு கார் ஓட்டி வந்துள்ளார். ஆனால், ஓலா நிறுவனம் அறிவித்தபடி கமிஷன் மற்றும் போனஸ் வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் 16 மணி நேரம் காரை ஓட்டினாலும் ரூ.100 மட்டுமே வீட்டிற்கு செல்லும்போது கிடைப்பதாகவும், இதை வைத்து குடும்பம் நடத்த முடியாது என்பதால் புதனன்று ஓலா நிறுவனத்தின் முன்பு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பிரசாத் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து புதனன்று ஆர்.எஸ்.புரம் ஓலா அலுவலகம் அருகே காவல்துறை யினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதேபோல் அப்பகுதியில் உள்ள ஓட்டுநர்களும் எவ்வித விபத்தும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே குவிந்தி ருந்தனர்.
இச்சூழலில் புதனன்று காலையில் வந்த பிரசாத்தை அங்கிருந்த மற்ற ஓட்டுநர்கள் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இதனையடுத்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, இவரின் மீது காவல்துறையினர் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வதாக தகவல் அறிந்து சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தின் சம்மேளன செயலாளர் எஸ்.மூர்த்தி, ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் பி.கே.சுகுமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இவரின் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வதாக இருந்தால் தற் கொலைக்கு தூண்டியதாக ஓலா நிறு வனத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வாதிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ஓலா நிறுவனத்தின் நெருக்கடி மற்றும் உழைப்பு சுரண்டலால் ஓட்டுநர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ள நிலையில், தற்போது ஓட்டுநர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என சிஐடியு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.