1886 - அமெரிக்கப் பூர்வகுடிகளான அப்பாச்சி இனத்தின் தலைவர் ஜெரோனிமோ, 30 ஆண்டுகளுக்கும் மேல் சளைக்காமல் போராடியபின், அமெரிக்க ராணுவத்திடம் சரணடைந்தார். ஒரே மாதிரியான பண்பாடுகளைக்கொண்ட பல பழங்குடியினங்கள் தொகுப்பாக அப்பாச்சி என்று அழைக்கப்படுகின்றன. இவர்கள் பொதுவாக, தற்போதைய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் வசித்தவர்கள். இப்பகுதிக்கு முதலில் வந்த அந்நியர்களான ஸ்பானியர்கள், இவர்களை அப்பாச்சு-டே-நபாஜோ என்று குறிப்பிட்டதிலிருந்தே அப்பாச்சி என்ற பெயர் உருவாகியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. இவர்களுடைய அப்பாச்சி மொழியிலும் ஸ்பானிய மொழியின் தாக்கம் அதிகம் காணப்படுவதுடன், இன்று எஞ்சியிருக்கும் அப்பாச்சி இனத்தவர்களும் தங்களை ஸ்பானிய மொழிப் பெயராலேயே அழைத்துக்கொள்கின்றனர். அமெரிக்க இந்தியப் போர்கள் என்று குறிப்பிடப்படும், 1609இலிருந்து 1924வரை நடைபெற்ற அமெரிக்காவின் பூர்வகுடிகளுக்கும், வந்தேறிகளான ஆங்கிலேயர்களுக்குமான மோதல்களில், இந்த அப்பாச்சி இனத்தினருடனான மோதல்களும் அடங்கும்.
1845இல் டெக்சாஸை அமெரிக்கா கைப்பற்றியதைத்தொடர்ந்து 1846இல் ஏற்பட்ட அமெரிக்க-மெக்சிகோ போரின்போது, அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல அப்பாச்சி மக்கள் உதவினர். ஆனாலும், அவர்களது பகுதிகளிலும் அமெரிக்கர்கள் ஆதிக்கம் செலுத்த முயற்சித்ததால் இருதரப்புக்கும் தொடர்ந்து மோதல்கள் நிலவின. ஜெரோனிமோ, அனைத்து அப்பாச்சி மக்களின் தலைவரல்ல என்றாலும், பல்வேறு பழங்குடி இனக்குழுக்களை ஒருங்கிணைத்து தீரமுடன் போரிட்டவர். அவரது போர்த் திறமையால் ஏராளமான பழங்குடியினர் அவர்பின் அணிவகுத்தனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகளிலிருந்தே 1875இல் அப்பாச்சி மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைத்தொடர்ந்து, மோதல்கள் கடுமையாயின. அரிசோனாவில் அப்பாச்சி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பாக வாழ வழிசெய்யப்படும் என்ற அமெரிக்க அரசின் உறுதியை ஏற்று இரண்டு முறை சரணடைந்த ஜெரோனிமோ, அந்த வாக்குறுதிகள் மீறப்பட்டபோது, தப்பிச்சென்று மீண்டும் வீரஞ்செறிந்த போர்களை நடத்தினார். இறுதியாக 1886 செப்டம்பர் 4இல் சரணடைந்த ஜெரோனிமோவை, போர்க்கைதியாகவே அமெரிக்க அரசு நடத்தியது. அமெரிக்கா முழுவதும் அவருக்கிருந்த புகழை அரசுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக, அப்பாச்சி என்ற பெயரையும், அவரையும் அரசு நிகழ்ச்சிகளில் முன்னிறுத்தினாலும், கைதி என்பதால் காவலர்கள் சூழவே அவர் எங்கும் செல்ல முடிந்தது. சொந்த மண்ணைப் பிடுங்கிக்கொண்டவர்களின் போர்க்கைதியாகவே 1909இல் தனது 79 வயதில் ஜெரோனிமோ மரணமடைந்தார்.
- அறிவுக்கடல்