tamilnadu

img

தமுஎகச மாநில செயற்குழு கூட்டத் தீர்மானம்!

சென்னை,பிப்.18- நேற்று நடைபெற்ற தமுஎகச பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நேற்று இணைய வழியில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பியக்கம் மற்றும் கருத்துரிமைப் பறிப்புக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமுஎகச மாநிலச் செயற்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: 
தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பியக்கம்: ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கையின் வரைவை வெளியிட்ட காலந்தொட்டே அதன் கெடுநோக்கங்களையும் விளைவுகளையும் அம்பலப்படுத்தி எதிர்த்து வருகிறது தமுஎகச. மாநில உரிமைகள், பன்மைத்துவப் பண்பாடு, குழந்தைகளின் உளவியல், கற்கும் உரிமை ஆகியவற்றுக்கு எதிரான இந்தக் கொள்கைக்குப் பரவலான எதிர்ப்பு கிளம்பியபோதும் ஒன்றிய அரசு பலவந்தமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. 
இந்நிலையில் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்துள்ள தமிழ்நாடு அரசைப் பணியவைக்க பல்வேறு நெருக்கடிகளை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது. தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் பள்ளிக்கல்வித் துறைக்குரிய நிதியை வழங்கமுடியும் என்று ஆணவமாக மிரட்டுகிறது. கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்ற இந்தக் கொடுமையை மறைக்க, தேசிய கல்விக் கொள்கை என்பது ஏதோ தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியொன்றை எப்படியாவது கற்றுக்கொடுப்பதற்காகவே வந்திருப்பதுபோல முன்வைக்கப்படுகிறது. 
இந்தியாவின் தேசியமொழிகளில் ஏதாவதொன்றை மூன்றாவது மொழியாக கற்கலாம் என்று பசப்பினாலும் நடைமுறையில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவ்விரண்டில் ஒன்றை மட்டுமே படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர் என்பதற்கு ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் நடத்திவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளே சான்று. 
இந்தி பேசாத - இருமொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டின் மீது மூன்றாவது மொழி என்கிற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு தேசிய கல்விக்கொள்கையே வழிவகுக்கிறது என்பதால் அந்தக் கொள்கைக்கு எதிராக மக்களைத் திரட்டுவதே இப்போதைய தேவை. இதன்பொருட்டு தமுஎகச,

  • தேசிய கல்விக்கொள்கையினை அம்பலப்படுத்தும் கல்வியாளர்களைக் கொண்டு இணையவழியில் தொடர் கருத்தரங்கங்களை நடத்துவது. 
  • துண்டறிக்கை வெளியிட்டு வெகுமக்களிடையே பரப்புரை மேற்கொள்வது
  • ஒத்த கருத்துள்ள அமைப்புகளுடன் இணைந்து மாவட்டங்களில் மார்ச்15 ஆம் தேதிக்குள் கருத்தரங்குகளை நடத்துவது. 

மாநில கல்விக்கொள்கைக்கான உயர்மட்டக்குழுவின் பரிந்துரைகளை உடனே வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமுஎகச வலியுறுத்துகிறது.   
கருத்துரிமைப் பறிப்புக்கு கண்டனம்: அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கண்ணியமற்ற முறையில் கைகால்களில் விலங்கு பூட்டி ராணுவ விமானத்தில் திருப்பியனுப்பிய செயலானது அப்பட்டமான மனிதவுரிமை மீறலாகும். இதனிடையே அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய பிரதமர் இந்தப் பிரச்னைக்கு சுமூகத்தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அங்கிருக்கும்போதே மீண்டும் இந்தியர்கள் முன்பைப்போலவே கண்ணியக்குறைவான வகையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.  இதுகுறித்து இந்தியப் பிரதமர் எவ்வித எதிர்ப்பையும் காட்டியதாக தெரியவில்லை. இந்நிலையில்தான், இந்தியப் பிரதமரை வைத்துக்கொண்டே  இந்தியர்களின் கைகால்களில் விலங்கு பூட்டியதானது அவருக்கே விலங்கு பூட்டியதற்கு ஒப்பாகும் என்கிற பொருளாழமிக்க கேலிச்சித்திரம் ஒன்றை விகடன் இணையதளம் சிலதினங்களுக்கு முன் வெளியிட்டது. இறையாண்மையும் தன்மதிப்புமுள்ள இந்த நாட்டை அவமதித்துள்ள அமெரிக்காவை கண்டித்திருக்க வேண்டிய ஆட்சியாளர்கள்,  அவமதிக்கப்பட்டதை உணர்த்திய விகடன் இணையதளத்தை முடக்கியுள்ளனர். இது அப்பட்டமான கருத்துரிமைப் பறிப்பாகும் என தமுஎகச கண்டிக்கிறது. 
உபா சட்டத்தின் கீழ் பொய்வழக்குப் புனைந்து ஊடகவியலாளர்கள் கைது, தாக்குதல், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு விசா மறுப்பு – கட்டாய வெளியேற்றம், ஊடகங்களின் அலுவலங்களுக்குள் சோதனை, ஒளிபரப்புக்குத் தடை, ஊடகம் தொடங்க அனுமதி மறுப்பு, விளம்பரங்கள் வழங்காமை, இணையதள முடக்கம், இணையப்பதிவுகளை நீக்குவது என்று கடந்த பத்தாண்டுகாலமாக பாஜக ஆட்சி கருத்துரிமைக்கு எதிராக நடத்திவரும் ஒடுக்குமுறையின் தொடர்ச்சியிலேயே விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், விகடன் இணையதள முடக்கத்தை நீக்கக் கோரியும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் நம்பிக்கையுள்ள அனைவருடனும் சேர்ந்து தமுஎகச குரலெழுப்புகிறது.  
அறிவியல் மனப்பாங்கை உருவாக்கும் நூல்களுக்கான “மருத்துவர் மு.சிவக்கண்ணு நினைவு விருது”: இது, தமுஎகச வழங்கிவரும் கலை இலக்கிய விருதுகளில் மேலுமொரு புதிய விருது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இவ்விருது ஆய்வாளர் தேமொழி அவர்களது நிதி நல்கையினாலானது. இவ்விருதுக்கும் 2024ஆம் ஆண்டில் வெளியான நூல்கள் மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூலின் மூன்று பிரதிகள் 2025 மார்ச் 10ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும். பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது