tamilnadu

அஸாகி நிறுவனத்தின் அராஜகத்திற்கு முடிவு கட்டி நியாயம் வழங்குக தமிழக அரசுக்கு சிஐடியு வலியுறுத்தல்

சென்னை, ஆக. 4- ஒப்புக்கொண்டபடி ஊதிய உயர்வு வழங்காமல் தொழிற்சங்கம் வைத்ததற்காக பழிவாங்கும் வகையில் நடந்துகொள்ளும் அஸாகி நிறுவனத்தின் அராஜகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிஐடியு இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு நியாயம் கிடைக்க வழி செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து  சி.ஐ.டி.யு தமிழ்நாடு மாநிலக்குழு தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் உள்ள, அஸாஹி இந்தியா கிளாஸ் லிமிடெட்  நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடந்த இரு வாரக் காலமாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.  ஒப்பந்த பேச்சு வார்த்தையை இரு ஆண்டுகளாகத் துவக்காமல், காலம் தாழ்த்துவதை எதிர்த்தும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடிய முன்னணி தொழிலாளர்கள் 28 பேரை நிர்வாகம் டிஸ்மிஸ் செய்ததை ரத்து செய்யக்கோரியும் கடந்த 2019 ம் ஆண்டு,வேலை நிறுத்தம் செய்தனர். 19.06.2019 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் துறை துணை ஆணையர், தொழிற்சங்கத்தின் சார்பில், எஸ். கண்ணன், இ. முத்துக்குமார், மற்றும் நிர்வாகிகள், நிர்வாகத்தரப்பில் கே.எஸ். ரவிக்குமார், செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் படி, 6 மாத அவகாசத்திற்குள் அனைத்து பிரச்சனைகளையும் சுமுகமாகப் பேசித் தீர்க்க இருதரப்புக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

அதன் படி பேச்சு வார்த்தையும் துவங்கி, மூன்று ஆண்டுகளுக்கு ரூ 8500 வரை வழங்க நிர்வாகம் சம்மதித்தது. கொரானா பாதிப்பு காலத்தில் அருகில் இருக்கும் பல கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களில் ரூ 20 ஆயிரம் வரை ஊதிய உயர்வு ஒப்பந்தங்கள் உருவாகி வருகின்றன. இதனால்  நிர்வாகம் வழங்க முன்வந்துள்ள தொகையை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. ஏற்புடைய அறிவுரை வழங்கப்பட்டு ஓராண்டுக்குப் பின்னரும் நிர்வாகம் பிரச்சனை நீடிக்க விரும்பியது. மேலும் அஸாஹி இந்தியா கிளாஸ் லிட்., நிறுவனம் `ஹூண்டாய், கியா, ரெனால்ட் நிசான், ஃபோர்டு, டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கு கண்ணாடி தயாரித்து வழங்கி வருகிறது. இதில் `ஹூண்டாய், கியா, நிசான் உள்ளிட்ட நிறுவனங்களில் உற்பத்தி வழக்கம் போல் உள்ளது. கொரானா காரணமாக எந்த ஒரு பதிப்பிற்கும் உள்ளாகவில்லை. ஆனாலும் அஸாஹி இந்தியா கிளாஸ் லிட்., நிறுவனம் தான் ஒப்புக்கொண்ட ரூ 8500 முடியாது, ரூ 5000 அளவில் தான் தர இயலும் என்றும், இதை ஏற்க மறுத்த தொழிற்சங்க நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்தும், கடுமையாக நடந்து கொண்டதால் மேற்படி  தொழிலாளர்கள் மீது வேலை நிறுத்தம் திணிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் நிர்வாகம் ஆன்லைன் மூலமாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மிக அமைதியாக வேலைநிறுத்தம் செய்துவந்த தொழிலாளர்களை 500 மீட்டருக்கு அப்பால் வெளியேற்றியுள்ளது. தொழிலாளர் துறையின் துணை ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில், உரிய பதில் அளிக்காமல் கால தாமதம் செய்து வருவதையும், தொழிற்சங்கம் வைத்த காரணத்திற்காக பழிவாங்கும் நிர்வாகத்தை சி.ஐ.டி.யு தமிழ் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தொடர்ந்து கால தாமதம் செய்து, தொழிலாளர்களிடம் ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொள்ளும்  நிர்வாகத்தை, நிர்ப்பந்தித்து நியாயமான தீர்வினை காணத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென சி.ஐ.டி.யு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.