சென்னை:
வாடகை வீட்டில் வசிப்பவர்கள், தனியாகவாழக் கூடியவர்கள், விதவைப் பெண்கள் ஆகியோர் குடும்ப அட்டை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் குடும்ப அட்டை பெறும் வகையில் சிரமங்களை களைந்து, விதிமுறைகளை எளிதாக்கிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 9 திங்களன்று தமிழக உணவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்வருமாறு:தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை விநியோகம் செய்து, ஏழை,எளிய மக்களின் உணவுபாதுகாப்பை உறுதி செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
நடைமுறையில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்து வருவதோடு, தற்போது புதியகுடும்ப அட்டை தேவைப்படுவோர் விண்ணப் பிப்பதும் அதிகரித்து வருகிறது.
தமிழக அரசும், புதியதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்துள்ள அனைவருக்கும் பதினைந்து தினங்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என அறிவிப்பு செய்திருப்பதை வரவேற்கிறோம். அதேசமயம் புதிய குடும்ப அட்டை வழங்குவதில்உள்ள சில குறைபாடுகள் களையப்பட வேண்டுமென கோருகிறோம். முதலாவதாக, வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் புதிய அட்டை கோரி விண்ணப்பிக்கும் போது வீட்டு உரிமையாளரிடம் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த நகல் கோரப்படுகிறது.பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களோ/ வாடகையில் குடியிருப்பவர்களோ வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதில்லை என்பது தான் நிதர்சனமான நடைமுறையாக உள்ளது.
மேலும் நிரந்தரமாக ஒரே வீட்டில் குடியிருக்கும் நிலை தற்போது இல்லை.இரண்டாவதாக, ஒரே குடும்பத்தில் இருக்கும் மகன்/மகள் திருமணம் செய்துகொண்ட பின் வீட்டில் ஒரு பகுதியிலோ அல்லது வீட்டின் மற்றொரு தளத்திலோ குடியமர்த்தப்படும் நிலையில், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் போது ஒரே வீட்டு எண் இருப்பதால் குடும்ப அட்டை வழங்க மறுக்கப்படுகிறது .ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் உள்ள பெயர் நீக்கல் செய்யப்பட்டுத்தான், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்கின்றனர்.மூன்றாவதாக, இந்தியாவிலேயே அதிகமாக முதியோர்கள் வாழக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. முதியோர்கள், குறிப்பாகவிதவைப் பெண்கள், தனி பெண்கள், பெற்றோர்களை இழந்த மகன்/ மகள் என தனியாக வாழக் கூடியவர்களுக்கு குடும்ப அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை களைவதற்கும் வழிவகை செய்திட வேண்டும்.இதுபோன்ற குறைபாடுகளை களையும் வகையில் சமையல் எரிவாயு இணைப்பு, வாக்காளர் பட்டியல், ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம் போன்றவற்றில் உள்ள முகவரியினை ஆய்வுசெய்து புதிய குடும்பஅட்டை வழங்கிட ஆவன செய்திடவேண்டும்.
மேலும் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் புதிய அட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பல இடங்களில் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. அரசின் அறிவிப்பை அமலாக்குவதற்கு துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தலை வழங்கிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.