tamilnadu

img

தமுஎகச மாநிலக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்

கீழடி அறிக்கையை திருத்தம் ஏதும் கோராமல் உள்ளது உள்ளபடியே உடனே வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நிறைவேற்றியுள்ளது. 
2025 ஜூன் 21,22 தேதிகளில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
⦁    கீழடியில் அகழாய்வு செய்து ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா வழங்கிய அறிக்கையை இதுவரையிலும் வெளியிடாமல் இழுத்தடித்துவரும் ஒன்றிய தொல்லியல் துறையை தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது. அறிவியல்பூர்வமான அவரது அறிக்கையானது சிந்துவெளி நாகரீகம், சங்க இலக்கியம், கீழடி ஆகியவற்றுக்கிடையே இழைந்திருக்கும் வரலாற்றுத் தொடர்பு தமிழர்களின் தொன்மையை பலநூறாண்டுகள் முன்னகர்த்திச் செல்வதுடன் இந்திய நாகரீகம் ஆரியர்களிடமிருந்தே தொடங்குகிறது என்கிற கற்பிதத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறது. இதனால் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள வரலாற்றுப் பகைமையிலிருந்தே அவர்கள் கீழடி அறிக்கையை வெளியிட மறுக்கின்றனர். புராணங்களிலும் இதிகாசங்களிலும் உள்ள புனைவுகளை உண்மைபோல சித்தரிக்கின்ற ஒன்றிய ஆட்சியாளர்கள், அறிவியல்பூர்வமான கீழடி ஆய்வறிக்கைக்கு மேலதிக அறிவியல் ஆதாரங்கள் தேவை என்று கூறி கீழடியின் தொன்மையைக் குறைத்துக்காட்டும் இழிவான முயற்சியை கைவிடவேண்டும். கீழடி அறிக்கையை திருத்தம் ஏதும் கோராமல் உள்ளது உள்ளபடியே உடனே வெளியிட வேண்டும் என்று ஒன்றிய தொல்லியல்துறையையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்தும் தீர்மானத்தினை தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்று தமுஎகச கோருகிறது.
⦁    கீழடி அகழாய்வினை ஆய்வுநேர்மையுடன் மேற்கொண்டதற்காக பழிவாங்கும் நோக்குடன் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களை தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து அலைக்கழித்து வரும் ஒன்றிய தொல்லியல் துறைக்கு தமுஎகச தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
⦁    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள வரலாறு மற்றும் தமிழ்த்துறை மாணவர்களும் பேராசிரியர்களும் தத்தமது வட்டாரங்களில் உள்ள அகழ்வாராய்ச்சிக் களங்களுக்கும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய இடங்களுக்கும் நேரடியாக சென்று தொல்லியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுப்பணியாற்றுவதை பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு உயர் கல்வித்துறையை தமுஎகச வலியுறுத்துகிறது.
⦁    தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் உலகிலேயே மிகப்பெரியதாக 180 அடி உயர முருகன் சிலைகளை அமைப்பதென்னும் முடிவினை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை மறுபரிசீலனை செய்யவேண்டும். உண்மையான பக்தர்களின் ஆன்மிகத்தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான வழிபாட்டுத்தலங்கள் இருக்கும் நிலையில், அவர்களது லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வாழ்வாதாரங்கள் ஆகியவற்றுக்காக துறையின் வருவாயைச் செலவிடுவதற்கு தமிழ்நாடு அரசும் இந்துசமய அறநிலையத் துறையும் முன்னுரிமை வழங்கவேண்டும் என தமுஎகச வலியுறுத்துகிறது.