10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாற்றம் எதுவுமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் உடைமைகளை இழந்து தவித்தனர்.
அதே போல் கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்கள் அதி கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இதனால் மாணவர்கள் பலர் பாடப் புத்தகங்களை இழந்து படிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
இதன் காரணமாக 10,11,12 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், 10,11,12 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தேதியில் மாற்றம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். தென்மாவட்டங்களில் மழையால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும்.
வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறந்த பிறகு மீதம் உள்ள அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும்.
பள்ளிகளில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்குப் பின்பாக பள்ளிகள் திறக்கப்படும்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக தயாரிக்கப்பட்ட 10,11,12 வகுப்புகளுக்கான வினா வங்கி புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
தென் மாவட்டங்களில் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.