17-வது மக்களவைத் தேர்தலில் வங்கம், கேரளம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இடதுசாரிகள் வீழ்த்தப்பட்டுவிட்டார்கள் என்றும் இந்தியாவில் இனி அவர்கள் எழவே முடியாது என்றும் முதலாளித்துவ ஊடகங்களும் ஏகாதிபத்திய கைக்கூலிகளும் மிகத்தீவிரமான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிற தருணத்தில், தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே, அதே இடதுசாரிப் பேரியக்கத்தின் முழக்கங்களையும் சிந்தனைகளையும் நெஞ்சில் ஏந்தி, தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்து திருச்சி நோக்கி சிங்கமெனப் புறப்பட்டார்கள் சுமார் 500 மாணவர்கள். சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் என்ற மாபெரும் முழக்கங்களை உரத்து முழங்கி, அந்த முழக்கங்களை தாங்கிய சிவப்பு நட்சத்திரம் பொறித்த வெண்கொடிப் பதாகைகள் தமிழகம் எங்கும் சாலைகள் தோறும் பட்டொளி வீசி பறந்திடும் விதமாக, 1500 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள் இந்திய மாணவர் சங்கத்தின் இளம் தோழர்கள். இடதுசாரிகள் வீழ்த்தப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் தேர்தல் முடிவுகள் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. இடதுசாரி இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் இதோ நாங்கள் இருக்கிறோம் என்று பறைசாற்றும்விதமாக, தமிழகத்தின் அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் பிரம்மாண்டமான சைக்கிள் பிரச்சாரப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான வீ.மாரியப்பன், திருச்சி நோக்கிய பயணத்தினூடே பெரம்பலூரில் தீக்கதிருக்கு அளித்த நேர்காணல்...
இந்தியாவில் இருக்கிற 2.5 கோடி இந்தியக் குழந்தைகளில் 1 கோடி குழந்தைகள் மட்டுமே பள்ளிக்குச் செல்கின்றனர். பள்ளிக்கு செல்லும் ஒரு கோடிப் பேரில் 40% சதவீதம் தனியார் பள்ளிகளில் பயில்கின்றனர். கடந்த 2001 ஆம் ஆண்டு தனியார் பள்ளிகளில் பயில்வோர் 18% ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டுகளை விட இரண்டு மடங்கு தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் 75% ஆக உயரக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்காவிலும் லண்டனிலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் பொதுப் பள்ளியிலே கல்வி கற்கின்றனர். ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக மாறி வருகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 21ஏ, இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு வருக்கும் கல்வி அடிப்படை உரிமை என வரையறுத்துள்ளது. கல்வி உரிமையை நிலை நாட்ட அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்திய அரசியலமைப்புச் சட்டமே வழிகாட்டும் நெறிமுறைகளை வலியுறுத்து கிறது. இந்தியா என்கிற ஜனநாயகக் குடி யரசு நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தை அமலாக்கம் செய்ய வைக்கவே பல கட்டப் போராட்டங்கள் நடத்த வேண்டியிருந்தது. அப்போராட்டங்களின் விளைவாய் இயற்றப்பட்டதே கட்டாய கல்வி உரிமை சட்டம். ஆனால், அடிப்படை வாழ்வியல் உரிமை யான கல்வியை விற்பனைப் பண்டமாக்கி கையெழுத்திட்டுள்ளது மோடி அரசு. மோடியைப் பின்பற்றும் அதிமுக அரசு, தமிழகத்தில் பொதுக்கல்வியின் மீது தாக்குதலை மூர்க்கப்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வி முழுவதையும் தனியாருக்கு கொடுக்கும் தங்கள் சூழ்ச்சியை பல்வேறு வடிவங்களில் செயல்முறைப்படுத்திவருகிறது.
மோசடி அறிவிப்புகளால் யாருக்கு பயன்?
தமிழகக் கல்வி வரலாறு சமண, பௌத்தப் பள்ளிகள், குருகுலப் பள்ளிகள், மெக்காலே கல்வி முறை என நீண்ட வரலாற்றைக் கடந்து வந்துள்ளது. பல்வேறுகட்ட போராட் டங்கள், சீர்திருத்தங்களின் வழியே அனை வருக்குமான கல்வி வாய்ப்பை உறுதி செய்கிற அரசுப் பள்ளிகள் என்கிற அமைப்பு நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தக் கல்வி வாய்ப்பைப் பறிக்கிற வேலையை மாநில அரசுகள் செய்யத் துவங்கியுள்ளன. கல்விக்கான கூடுதல் செஸ் வரிவிதிப்பிற்குப் பின் 2018-2019 ஆம் ஆண்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 3.7 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது. ஆக கல்விக்காக மக்களிடம் வசூலிக்கப்படும் வரி எங்கே செல்கிறது? கல்விக்கு நிதிக்குறைப்பு செய்து விட்டு பழங்குடியினருக்கான கல்வித்திட்டம், பெண்குழந்தைகளுக்கான கல்வித் திட்டம் என ஜூம்லா (மோசடி)அறிவிப்புகளை செய்வதால் யாருக்குப் பலன்?
தமிழக அரசின் இரட்டை வேடம்
தமிழகத்தில் ஒருபுறம் பள்ளிக் கல்வி சார்ந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள். மறுபுறம் ஒட்டுமொத்த அரசுப் பள்ளி களையும் மூடுவதற்கான முயற்சி என இரட்டை வேடமிட்டுக் கொண்டிருக்கிறது மாநில அரசு. 2018 ஆம் ஆண்டுத் தரவுப் படி தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற ஆணைப் படி அடிப்படைக் கட்டமைப்பை வசதிகள் இல்லாத குறிப்பாக கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள் 30 சதவீதத் திற்கும் மேல். மேலும் தமிழகத்தில் 820 அரசுப் பள்ளிகள் ஓராசிரியர் கொண்டு இயங்கும் பள்ளிகள். இரண்டு ஆசிரியர் கொண்டு இயங்கும் பள்ளிகள் 1000 மேல் இருக்கும் என அரசுப் பள்ளி ஆசியர் சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 37 சதவீதமான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் இல்லை. உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் 57 மாணவர் களுக்கு ஒரு ஆசிரியர் என்பதே அரசுப்பள்ளி களின் இன்றைய நிலை. அதனினும் கொடுமை அரசுப் பள்ளிகளுக்கு துப்புரவுப் பணியாளர் நியமனம் என்பதே கிடையாது.
# தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகள் உள்ளன
# கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள் 30 சதவீதத்திற்கும் மேல்
# இரண்டு ஆசிரியர் கொண்டு இயங்கும் பள்ளிகள் 1000
# 37 சதவீதமான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் இல்லை
# அரசுப் பள்ளிகளுக்கு துப்புரவுப் பணியாளர் நியமனம் என்பதே கிடையாது
அரசுப் பள்ளிகள் இந்த நிலையில் இருக்க, மாணவர் சேர்க்கை குறைவு என்ற காரணத்தைக் காட்டிப் பள்ளிகளை மூடுவது வஞ்சம் இல்லையா? அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இது வரை என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது? 2016 ஆம் ஆண்டு 5715 அரசுப் பள்ளிகள் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்ததால் மூடும் நிலையில் இருந்தன.
அவற்றைப் பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
கேரளமும் தமிழகமும்
பொதுக்கல்வி பாதுகாப்பு என்ற பெயரில் கேரள இடது முன்னணி அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கடந்த 25 ஆண்டு களில் இல்லாத அளவு அரசுப் பள்ளி களில் மாணவர் சேர்க்கை வீதம் அதிகரித்திருக்கிறது. அவர்கள் எடுத்த நடவடிக்கை களில் முதன்மையானவை, பள்ளிக்கு கல்விக்கான நிதியை அதிகப்படுத்தியதும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதும் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளை நெறிப்படுத்தியதும் ஆகும். ஆனால் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இங்கே குறிப்பிட்ட அளவு நிலமும் கட்டிடமும் கட்டிக் கொள்ள வசதியும் இருக்கிற யாரும் பள்ளிக்கூடம் கட்டலாம். மேலும் 15 மாணவர்கள் கொண்டிருந்தால் தான் ஒரு அரசுப் பள்ளி இயங்க முடியும் என கூறுகிற தமிழக அரசு, தனி யார் பள்ளிகள் எவ்வளவு மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. தனியார் பள்ளிகளில் கட்டற்று மாணவர் சேர்க்கை நடைபெற எல்லா வாய்ப்பு களையும் கொடுத்துவிட்டு அதற்கு ஏதுவாக அரசுப் பள்ளிகளை மோசமான நிலையில் வைத்திருக்கிறது தமிழக அரசு.
எங்கள் பயணம் ஏன்?
எனவேதான் அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்; ஆசிரியர், மாணவர் விகிதாச்சரம் 20:1 என்ற வீதத்தில் இருக்கும் வண்ணம் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை வாரியம் அமைக்கபடுவதை உறுதிப்படுத்த வேண்டும்;
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்; மேம்படுத்தப்பட்ட நவீனமயமான கற்றல் கற்பித்தல் முறைகளை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசு பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வதோடு அதிக மதிப்பெண்பெறும் 10ஆம் வகுப்பு மாண வர்களை தனியார் பள்ளியில் அரசே சேர்க்கும் முடிவைக் கைவிட வேண்டும்; கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அரு கமைப் பள்ளிகள் பொதுப்பள்ளி முறை அமல்படுத்தப்பட வேண்டும் - என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
நடுத்தர ஏழை எளிய மாணவர்கள் கல்வி பெறவும் பாகுபாடற்ற சமூகம் உருவாகவும் அரசுப் பள்ளிகளே அடிப்படை. ஆகவே தான் தனியார் மயத்திற்கெதிராக அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி என்கிற நவீன கொள்கையைக் கொண்டு களத்தில் நிற்கிற இந்திய மாணவர் சங்கம், அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம் என்கிற தலைமுறைக்கான முழக்கத்துடன் கடந்த 25 ஆம் தேதி துவங்கி தமிழகம் முழுக்க சென்னை, குமரி, கோவை, கடலூர் நான்கு முனைகளில் இருந்து துவங்கிய பிரச்சாரப் பயணம் பொதுமக்கள், வெகுஜன அமைப்பு களின் பேராதரவோடு மே 31 (இன்று) திருச்சியில் நடைபெற இருக்கிற மாபெரும் பொதுக் கூட்டத்துடன் நிறைவடைய இருக்கிறது.
பொதுக் கல்வியைப் பாதுகாக்க நம் கல்வி உரிமையை நிலைநாட்ட திருச்சியில் சங்கமிப்போம்.