சென்னை:
ஜூன் 21 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்றம் கூடுகிறது என்றும் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்றக் கூட்டம் அன்று காலை 10 மணிக்கு துவங்கும் என்றும் புதன்கிழமையன்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியதும் சட்டப்பேரவை அலுவல்ஆய்வு குழு கூடுகிறது. கூட்டத்தில் பேரவையை எத்தனை நாள் நடத்துவது என்று குறித்து முடிவு செய்யப்படும் என்றும் இதற்கு ஆளுநர் தனது இசைவை தெரிவித்துள்ளார் எனவும் அப்பாவு தெரிவித்தார். கூட்டத்தில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் நெகட்டிவ் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தனிமனித இடைவெளி விட்டு இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் சபாநாயகர் கூறினார்.