தொடர் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திட உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பருவ மழையின் விளைவாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு நிர்வாக ரீதியாக பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், விவசாயிகள் கைமுதலை இழந்து பெரும் நட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். திருவாரூர். தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை. புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை நெற்பயிர் அறுவடை செய்ய முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேலும். சம்பா நடவு செய்யப்பட வேண்டிய நிலத்திலும் நீர் தேங்கி இருக்கிற காரணத்தினால் சம்பா நடவும் பாதிப்பை சந்திக்கக்கூடிய நிலையில் இருக்கிறது. மேலும். சில மாவட்டங்களில் கம்பு, மரவள்ளி, மணிலா, மக்காசோளம், பூச்செடிகள் உள்ளிட்ட பயிர்கள் பாதிகப்பட்டுள்ளன. மிகக் கடுமையான பாதிப்பை விவசாயிகள் சந்தித்துள்ள இத்தருணத்தில், தமிழ்நாடு அரசு பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திட உத்திரவிடுவதுடன் பாதிப்புகளுக்கு ஏற்ப அரசு இழப்பீடு வழங்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்படும் வகையில் அரசின் அணுகுமுறை இருப்பது அவசியம்.
இந்த ஆண்டு குறுவை சாகுபடி கூடுதலான பரப்பளவில் நடைபெற்றுள்ளது. தொடர் மழையினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகாமல் பாதுகாப்பாக வைப்பதற்குரிய மாற்று ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான அளவு நிரந்தரமான கிடங்கு வசதிகளை உருவாக்கிட அரசு திட்டமிட வேண்டும். நெல்கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்
அதே நேரத்தில், அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர்மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால். ஒன்றிய பிஜேபி அரசு இதற்கு அனுமதி தராமல் காலம் கடத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது. இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே. உடனடியாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய உத்தரவு வழங்கிட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய பிஜேபி அரசை வலியுறுத்துகிறது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
