tamilnadu

img

ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு! - முதல்வர், அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னையில் உள்ள டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி விட்டுவிட்டுப் பாடப்படாததால் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் 'திராவிடநல் திருநாடு' வரி திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்:
"ஆளுநரா? ஆரியநரா?
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? 
தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!"
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம்:
"தமிழ்நாட்டின் ஆளுநர் இன்று பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திட்டமிட்டே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்'  என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆளுநரை திருப்தி படுத்த டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு செய்தார்களா?
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அதைத் திருத்தி, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை வாசிக்காமல் விடுபட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய கீதத்திலும் 'திராவிட' என்ற வார்த்தை வருகிறதே? அதை தவிர்த்து விட்டு பாட முடியுமா?
தேசிய கீதம் நாட்டிற்கு பெருமை என்றால், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டிற்கு பெருமை தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் உணர வேண்டும்."
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
"இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுனர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய
"தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது 
மாபெரும் தவறாகும். 
இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.
திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி!
திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி!
திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு!
தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும்  வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்."