சென்னையில் 9 இடங்களில் மின்னூட்ட நிலையம் அமைகிறது
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை, மே 28 - சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட நிலையங்கள் (சார்ஜிங் சென்டர்) அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் புதனன்று (மே 28) ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு அண்ணாசாலை காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவவும், புரசைவாக்கம் பிரிக்ளின் சாலைக்கு ‘தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சாலை’ என பெயர் சூட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள் வருமாறு: 15 மண்டலங்களிலும் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட உள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படாத 9 இடங்களில் முதற்கட்டமாக சார்ஜிங் நிலையம் அமைக்கப்படும். பெசன்நகர், அஷ்டலட்சுமி கோயில் மற்றும் கடற்கரை, அம்பத்தூர் மங்கல் ஏரி, தி.நகர் மாநகராட்சி மைதானம் மற்றும் சோமசுந்தரம் மைதானம், ஆயிரம் விளக்கு செம்மொழி பூங்கா, மெரினா கடற்கரை, அண்ணாநகர் போகன் வில்லா பூங்கா, மயிலாப்பூர் நகேஸ்வரா ராவ் பூங்கா ஆகிய இடங்களில் இந்த மையம் அமைகிறது. சீருடை பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், திறன்மேம்பாட்டு (தையல் , ஆரி, அழகு கலை, கணினி) பயிற்சி வழங்கப்படும். இதற்காக மண்டலத்திற்கு ரூ.50 லட்சம் வீதம் ரூ.7.50 கோடி செலவிடப்படும். என்எம்ஆர், என்யுஎல்எம் தொழிலாளர்கள் 9ஆயிரத்து 525 பேருக்கு சீருடை, துண்டு, தொப்பி ஆகியவை ரூ. 4.74 கோடி செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும். பட்டா வண்டிப்பாட்டை, பாதை, வண்டிப்பாதை, பாட்டை, களம், சர்க்கார் புறம்போக்கு (மயானம், அனாதீனம்), இடுகாடு, சுடுகாடு, போன்ற அரசு புறம்போக்கு நிலம், மாநகராட்சி இடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போரில் தகுதியுள்ளோருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க தடையில்லாச் சான்று வழங்கப்படும்.