ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தக தின வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:
ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. வரலாற்றை அறிந்து கொள்வதற்கும், சமூக வாழ்வியல் குறித்து கற்றுக் கொள்வதற்கும் சிறந்த புத்தகங்களே எப்போதும் உதவி செய்கின்றன. அறிவை விரிவு செய்வதற்கும், விசாலப் பார்வையால் உலகை காண்பதற்கும் புத்தக வாசிப்பை பரவலாக்குவோம்.
ஒவ்வொருவர் கைகளிலும் இருக்கும் திறன் பேசியை போல, ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையில் உள்ள தொலைக்காட்சியை போல வீடுகள் தோறும் நூலகம் அமைப்போம். வாசிப்பிற்கான புதிய வாசல் திறக்கட்டும். வாசிப்பை இயக்கமாக்குவோம். ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமூகம் காண புத்தகங்கள் எனும் அறிவாயுதத்தை நமது கரங்களில் ஏந்துவோம். அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.