தலைவர்கள் கண்டனம்: இருவர் கைது
விழுப்புரம், மே11- விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை எரித்துக் கொலை செய்த அதிமுக கிளைச் செயலாளர், முன்னாள் கவுன்சிலர் மகன் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட்பட்டது சிறுமதுரை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ஜெயபால் கூலி தொழிலாளி. இவருக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள். இதில் ஜெயஸ்ரீ தான் மூத்த பெண்.
ஜெயபால் தனது வீட்டிலேயே சிறிய (பங்க்) கடை வைத்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு 9 ஆம் தேதி இரவு 10 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த குமரகுருபரன் மகன் பிரவீன்குமார் பீடி கடன் கேட்டு வாய் தகராறு செய்துள்ளார். பின்னர் கைகலப்பாக மாறியதில் ஜெயபால் மகன், மனைவி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் ஜெயபால் புகார் கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக சமாதான பேச்சு நடத்த அப்பகுதி அதிமுக கிளைச் செயலாளர் கலியபெருமாள் மகன் ஏசகன் (எ) கலியமூர்த்தி, அதே பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் ஜெயபாலின் வீட்டுக்கு கடந்த 10 ஆம் தேதி 10.30 மணிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஜெயபாலும், மகன் ஜெயராஜூயும் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றுவிட்டனர். அவருடைய தாய் ராஜ் வயலுக்கு ஆடு ஓட்டி சென்று விட, இவர்களது பெரிய மகள் ஜெயஸ்ரீ 15) பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் சம்பவத்தன்று வீட்டையும், கடையையும் பார்த்து கொண்டு இருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அக்கம் பக்கம் உள்ளவர்களின் நடமாட்டம் குறைவாக இருந்து உள்ளது. அப்போது ஏசகன், முருகன் இருவரும் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ வாயில் துணியை அழுத்தி சத்தம் வெளிவராமல் பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு கதவை மூடி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 11 மணி அளவில் அந்த வீட்டிலிருந்து தீப்புகை வெளியாகியுள்ளது. அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது ஜெயஸ்ரீ தீக்காயத்துடன் எரிந்து கொண்டிருந்தார் . உடனடியாக அவரை அக்கம் பக்கம் இருந்த உறவினர்களுடன் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடனடியாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார். விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் திருவெண்ணைநல்லூர் ஆய்வாளர் பாண்டியன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நீதிபதி ஆகியோர் மருத்துமனைக்கு சென்று அந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது, “தன்னை கட்டிப்போட்ட ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த மாணவியின் உடல்நிலை மோசமடைந்த தால் மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் ஜெயஸ்ரீயை காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார். மாணவியின் தந்தை அளித்த புகாரின் பெயரில் முருகன்,ஏசகன் ஆகிய இருவரையும் திருவெண்ணைநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கடந்த 7 வருடத்திற்கு முன்பு (2013 ஆண்டு) ஜெயபால் தம்பி குமாரை எதிரிகள் வெட்டி உள்ளனர். அது குறித்த வழக்கு திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலிருந்து அவ்வப்போது இவர்களுக்குள் சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளது. தந்தையுடன் ஏற்பட்ட முன்விரோத தகராறு காரணமாக அவரது மகள் பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.ஸ்டாலின் கண்டனம்
சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று அறிக்கை ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்தக் கொடூர கொலைக் குற்றத்தில் ஆளுங்கட்சி யினர் சம்பந்தப்பட்டுள்ளதால், காவல்துறையினர் பெயரளவிற்கு செயல்படாமல், சட்டத்தின் முழு வலிமையையும் நியாயமாகவும் வேகமாக வும் பயன்படுத்த வேண்டும். விரைந்து உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க துணை நிற்போம் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஜெயஸ்ரீ எரித்து கொல்லப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் கண்டனம்
பள்ளி மாணவியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பரமணியன் அறிக்கை விடுத்துள்ளார், அதில், இந்த சம்பவம் மனிதத் தன்மையற்ற கொடூரமான செயல். இதனை விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கவேண்டும்.
ஊரடங்கின் போது இந்த சம்பவம் நடந்து உள்ளதால் அரசு பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் இதுபோன்று பெண்கள், குழந்தைகள் மீது வன்முறைகள் நடக்காமல் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.