tamilnadu

img

‘எங்க பரம்பரையில் கல்லூரி வாசல்படி ஏறப்போகும் முதல் நபர் நான்தான்’

மதுரை, ஜூலை. 21- மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தேவயானி. அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்து, தற்போது 600-க்கு - 500 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரது அப்பா கணேசன் - அம்மா லெட்சுமி. இரு வரும் குடு குடுப்பை மூலம் குறிசொல்லி, குழந்தைகளைக் காப்பாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 6 பிள்ளைகள். இதில் தேவயானி 3-வது பிள்ளை. தேவயானியின் அக்கா ஒருவர் ஏற்கனவே பிளஸ் 2 முடித்து வறுமை காரணமாக படிப்பைத் தொடரமுடியவில்லை. இந்நிலையில், தேவயானி கல்லூரி படிப்பை தொடர உள்ளார். வீட்டில் மின் விளக்கு வசதி இல்லாமல் படித்துவரும் தேவயானி நாடோடி சமூகத்தை சேர்ந்தவர். தங்கள் உறவினர் பலரும் பள்ளிக்கே செல்லாத சூழலில், தான் கல்லூரி படிப்பை முடித்து ஐ.ஏ.எஸ் ஆகப் போவதாக உற்சாகமாக தெரிவிக்கிறார். இந்நிலையில்தான், மேல்படிப்பு படிக்க போதுமான வசதி இல்லை என அரசு உதவியை நாடியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்களன்று  தன் பெற்றோருடன் வந்திருந்த தேவயானி கூறுகையில். ``வீட்டில் அக்கா தம்பினு மொத்தம் நாங்க 6 பேரு. அப்பா, அம்மா குறி சொல்லப்போனாதான் காசு. சாப்பாட்டுகே திண்டாட்டம்தான். எங்க பரம்பரையில யாரும் கல்லூரி வரை போனதில்லை. அக்கா மட்டும்  பிளஸ் 2 வரைக்கும் போனா. அவளக் கட்டிக்கொடுக்கவே காசு இல்லேனு, படிக்க வைக்காம கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.

கலெக்டர் ஆகணும்

நான் பிளஸ் 2வில்  இப்ப 500 மார்க் எடுத்துருக்கேன். தெருவிளக்கில் தான் எங்க ஏரியா பிள்ளைங்க எல்லாரும் படிப்போம். பெரும்பாலும் யாரு வீட்டுலையும் மின்சார வசதி  இருக்காது. சின்ன பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுத்துட்டே நானும் படிப்பேன். இப்ப பிளஸ் 2 முடிச்சுட்டு காலேஜ் போகப்போறேன். எங்க அப்பாவும், `நல்லா படித்தா’னு சொல்லிட்டாங்க. எங்க பரம்பரையில் கல்லூரி வாசல்படி ஏறப்போகும் முதல் நபர். எனக்கு பி.காம் முடிச்சுட்டு, ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதனும்னு ஆசை. படிச்சு கலெக்டர் ஆகி என்னைப் போல் நலிந்து கீழ் மட்டத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு கல்வி கிடைப்பதை எளிமையாக்கணும். அதுதான் என் லட்சியம். நான் படிக்கனும் ஆனா எனக்கு போதுமான பொருளாதாரம் இல்ல. அதனால தமிழக அரசு எனக்கு உதவி பண்ணனும். நான் படிச்சா, என் சமூகத்தில் இருக்கவுங்க என்னைப் பார்த்து குறைஞ்சது 10 பேராச்சும் காலேஜ் படிப்பாங்க” என்று நம்பிக்கை குரலில்  கூறினார்  மாணவி தேவயானி.