சத்தீஸ்கர் மாநிலத்தில் மகளின் சடலத்தை 10 கி.மீ வரை தந்தை சுமந்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர்தாஸ். இவர் தனது மகள் சுரேகாவை உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள சுகாதாரத்துறை மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். கடந்த சில நாட்களாக அந்த சிறுமிக்கு அதிக காய்ச்சல் இருந்த நிலையில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது.
இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர் வினோத் பார்கவ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் உதவியை உறவினர்கள் கோரிய நிலையில் மற்றொரு சடலம் விரைவில் வரும் என்றும் அதுவரை காத்திருக்குமாறும் அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஈஸ்வர்தாஸ் தனது மகளின் சடலத்தை தோளில் சுமந்தவாறு 10கி.மீ தூரம் உள்ள கிராமத்தை நோக்கி சாலையில் நடந்து சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். வேதனையாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரியிடம் கூறியுள்ளேன். சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்டு பணியை செய்ய முடியாதவர்களை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.