tamilnadu

img

ஊரடங்கால் கரைந்துபோன உப்பள தொழில்!

 

தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது தூத்துக்குடி. அதற்கு அடுத்தப்படியாக நாகை மாவட்டம் வேதாரண்யம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களில்தான் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

மரக்காணத்தில் மத்திய அரசுக்கு சொந்தமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும், மாநில அரசுக்கு சொந்தமாக 1,500 ஏக்கர் நிலப்பரப்பிலும் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 5 லட்சம் டன் உப்பு தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின் தேவைக்கு போக மீதமுள்ளவை புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை மரக்காணத்தில் உப்பு உற்பத்தி செய்யும் பணி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வழக்கம்போல் ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி செய்யும் பணி தொடங்கியது. இந்த பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கோடைகாலம்தான் உப்பு உற்பத்திக்கு ஏற்ற பருவநிலை. இந்த காலக் கட்டத்தில்தான் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்படும்.

முடக்கம்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட உப்பு குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் ஓடாததால் அதனை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. உப்பளத்தில் இருந்து வரப்புகளில் சேமித்து வைக்கப்பட்ட உப்பை அள்ளவும் தொழிலாளர்கள் இல்லை. இதனால் உப்பளங்களில் 50 ஆயிரம் டன்னுக்கு மேல் உப்பு தேங்கி கிடக்கிறது. மரக்காணம் உப்பளத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளளதால் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

பாதிப்பு

இது குறித்து உப்பள தொழிலாளர்கள் கூறுகையில், "நாங்கள் முழுக்க, முழுக்க உப்பு உற்பத்தி தொழிலையே நம்பி இருக்கிறோம். தினமும் வேலைக்கு சென்று கிடைக்கும் கூலியை வைத்துதான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்லவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம்" என்றனர்.

"ஊரடங்கு முடியும் வரை எங்களுக்கு போதிய அரிசி, காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

பத்தாயிரம் பேர்...

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தூத்துக்குடிக்கு அடுத்து, உப்பு உற்பத்தியில் 2-வது இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.  ஊரடங்கால் உப்பள பகுதியில் வேலை பார்த்து வந்த 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து வீடுகளிலேயே முடங்கிப்போய் இருக்கின்றனர்.

தேக்கம்

இந்த நிலையில் அத்தியாவசிய பொருளான உப்பை உற்பத்தி செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று தற்போது 800 உப்பள தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு உப்பள பகுதியில் உப்பு எடுத்து வருகின்றனர்.

கடும் வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகரிக்கும் நிலையில் நாள் ஒன்றுக்கு 100 லாரிகளில் உப்பு ஏற்றுமதி செய்யப்படும். ஆனால், தற்போது போக்குவரத்து முடக்கம் காரணமாக  10 லாரிகளில் மட்டுமே தினசரி உப்பு ஏற்றுமதியாகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான உப்பு மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. உப்பு ஏற்றுமதி இல்லாததால் உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இயல்பு நிலை எப்போதும் திரும்பும்? ஏற்றுமதி எப்போது நடைபெறும்? அது வரைக்கும் வாழ்வாதாரத்திற்கு வழி என்ன? என்பதே உப்பள தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.