உடுமலை, டிச. 17- பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி செவ்வாயன்று(டிச.17) உடுமலை வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் வன எல்லை கிராமங்கள் மட்டுமின்றி வனத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள பகுதிகளிலும் ஏராளமான காட்டுப்பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இந்த காட்டுப்பன்றிகளால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பல நூறு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யவிருந்த மக்காச்சோளம், தென்னை, நெல் என அனைத்து பயிர்களையும் சேதப்படுத்தி உள்ளதுடன், விவசாயிகள், கால்நடைகளையும் கூட்டமாக வந்து தாக்கி வருகின்றன. இதுகுறித்து வனத்துறையினரிடம் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து முறையிட்டும், பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், வனத்திற்கு வெளியே சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று உடுமலை வனத்துறை அலுவலகம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், உடுக்கம்பாளையம் பரமசிவம், ரத்தினசபாபதி, அருள், கனகுவேல், திருமலைசாமி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பொள்ளாச்சி தொகுதி எம்பி, .சண்முகசுந்தரம், மடத்துக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகவேலு ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.