விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பாலப் பணிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டது. மூன்று பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெறுவதாலும், சரியான திட்டமிடல் இல்லாததாலும் இராஜபாளையம் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இராஜபாளையம் நகரில் அனைத்து தெருக்களும் தோண்டப்பட்டு சரியாக சமப்படுத்தப்படாததால் தினசரி விபத்துக்கள் நடைபெறு கிறது. மக்கள் படும் சிரமங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமூக வலை தளம் மூலமாக ஆய்வுஒன்றை நடத்தியது. 865 பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். மக்களின் கருத்துக்கள் தொகுக்கப் பட்டு அறிக்கையாக செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி நகராட்சி ஆணையாளர் மூலம் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இராஜபாளையத்தின் அனைத்து தெருக்களையும் சீரமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ரயில்வே மேம்பால பணிக்கான நில எடுப்பு நடவடிக்கையை தொடங்க வேண்டும், தரமற்ற பணிகள் செய்துள்ள ஒப்பந்ததாரர், துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுநல அமைப்புகள் இணைந்து “நம் நகரை சீரமைக்க நகராட்சியில் அணிதிரள்வோம்” என்ற முழக்கத்தோடு செவ்வாயன்று 350-க்கும் மேற்பட்டோர் நகராட்சி முன்பு திரண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் பி.மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.குருசாமி, சி.முருகேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி. கணேசன், ஏ.இராமர், கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம். முனியாண்டி, மாதர் சங்கமாவட்டச் செயலாளர் தெய்வானை, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் நாகராஜ், மாவட்டப் பொருளாளர் எம்.சுந்தரபாண்டியன் ஆட்டோ சங்கத் தலைவர் எம்.அம்மாசி, டாக்சி சங்க செயலாளர் கே.கண்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா, அறம் அறக்கட்டளை மணிகண்டன், திமில் அக்கினி புத்திரன், இராஜபாளையம் முகநூல் நண்பர்கள் சரவணன், அன்னை தெரசா நற்பணி இயக்கம் ஜெகன், முஸ்லிம் ஜமாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்க்குழு உறுப்பினர்கள் எம்.சுப்பிரமணியன், ஏ.பன்னீர்செல்வம், பி.சிவஞானம், பி.பால்ராஜ், எஸ்.முருகானந்தம்,பி.இராமசுப்பிரமணியன், எம்.மேரி, ஜி.திருமலை வடிவு உட்பட 359 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து பாதாளச் சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள், நகராட்சி ஆணையாளர், வருவாய் வட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “ உடனடியாக அனைத்து தெருக்களையும் சமப்படுத்தும் பணி தொடங்கப்படும். இராஜபாளையம் நகரின் பிரதான சாலையான முடங்கியார் சாலை பணிகள் விரைவாக முடிக்கப்படும். பழுதடைந்த இடங்கள் உடனடியாக சீரமைக்கப்படும். 55 தெருக்களில் சாலை போடுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும், பத்து தெருக்களில் சில நாட்களில் பணிகளை முடித்து சாலைகள் அமைக்கப்படும். நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வீணாவது சரி செய்யப்படும்” என உறுதியளித்தனர்.மேலும், கணபதியாபுரம் சாலை, ஸ்ரீரங்கபாளையம் சாலைகளை சீரமைக்கவேண்டும். ஐன்டியுசி நகர் வழியாக வரக்கூடிய பாதையை ரயில்வே நிர்வாகம் அடைத்துள்ளது. அதை திறந்துவிட வேண்டும். இந்த கோரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் தரவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.(ந.நி.)