விழுப்புரம், அக்.25- தீபாவளிப் பண்டிகையின்போது, பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து விபத்தில்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தீபாவளி பண்டிகையில் விருந்து, இனிப்புடன் சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது என்பது காலம், காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளிப் பண்டிகை, விழாக்காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டுத்தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டுத்தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, தீபாவளிப் பண்டிகையில் நமது கவனக்குறைவினாலும், அலட்சியத்தினாலும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க அதிக சத்தமுள்ள பட்டாசுகளை தவிர்த்து, விபத்தில்லாத தீபாவளிப் பண்டிகையை அனைவரும் கொண்டாட வேண்டும். பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, தமிழக அரசு அறிவித்துள்ள கால அளவுக்குள் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், புனிதத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மீறி வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். சிறார்கள், பெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று அதில் தெரிவித்துள்ளர்.