சென்னை,ஜன.18- வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகிவிட்ட நிலையில், பகலில் வறண்ட வானிலையும், அதிகாலையில் பனிப் பொழிவும் நிலவி வருகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக பல மாவட்டங்களில் நள்ளிரவிலும், அதி காலையிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில், பல பகுதிகளில் அதி காலையில் சாரல் மழை பெய்தது. திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை மாவட்டங்க ளிலும், புதுச்சேரியிலும் மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் கனமழை கொட்டி யது. தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்க ளில் மிதமான மழை பெய்தது.