tamilnadu

வட்டவடயில் முடித் திருத்தகத்தில் சாதிய பாகுபாடு... நூற்றாண்டுகள் நீடித்த தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி

வட்டவடா:
கேரளத்தில் இடுக்கி மாவட்டம் வட்டவடயில்பல தலைமுறைகளாக முடித் திருத்துவதில் நீடித்து வந்த சாதிய பாகுபாடுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பொது முடிதிருத்தகம் தொடங்கப்பட்டுள்ளது. கோவிலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பஞ்சாயத்து கட்டடத்தில் தொடங்கப்பட்ட முடிதிருத்தும்கடையை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

தாழ்த்தப்பட்டோரின் தலைமுடியை வெட்டமறுத்தது தொடர்பான விவாதம் எழுந்ததும் பஞ்சாயத்து தலையிட்டு, பாகுபாடு காட்டும் முடிதிருத்தும் கடைகளை மூடியது. அனைவரும் அணுக அனுமதிக்கும் பொது முடிதிருத்தும் கடையைத் தொடங்க முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள பஞ்சாயத்து கட்டடத்தில் முடிதிருத்தும் கடை திறக்கப்பட்டது. சாதி பாகுபாடு தொடரக் கூடாதுஎன்றும், பொது முடிதிருத்தும் கடையைத்திறப்பது அனைவருக்கும் தலைமுடி வெட்டுவதற்கான உரிமையை நிலைநாட்டுவதற்காக என்றும் எம்எல்ஏ ராஜேந்திரன் கூறினார். வட்டவடா மண்ணில் சாதி பாகுபாடு இனி அனுமதிக்கப்படாது என்பதில் புதிய தலைமுறையும் உறுதியாக உள்ளது.

அதோடு, இனி வட்டவடயில் அனைவரும்நுழைய அனுமதிக்கும் முடிதிருத்தும் கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். பஞ்சாயத்தின் தலையீட்டால் பொது முடிதிருத்தும் கடை திறக்கப்படுவது பல நூற்றாண்டுகளாக நீடித்த பெரும் பாகுபாட்டின் முடிவை பிரகடனம் செய்தது. இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் ஆர்.ராமராஜ், வாரிய உறுப்பினர்கள் எம்.கே.முருகன், அலகா ராஜ், ஜெயாமரியப்பன், முடிதிருத்துவோர் சங்க மாவட்ட செயலாளர் ஷிபு, செயலாளர் ஆர்.நந்தகுமார், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள்கலந்து கொண்டனர்.