திருவாரூர், அக்.28 - திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மேல வடபோக்கி தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் உந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக, தனியார் கழிவு நீர் வண்டி மூலம், பாதாளச் சாக்கடை குழிக்குள் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. அப்போது தனியார் கழிவுநீர் வாகனத்தின் ஓட்டுநர் மணிமாறன் (30) மேன்ஹோல் பகுதியில் வழுக்கி பாதாளச் சாக்கடை குழிக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்றுவதற்காக வாருகுச்சி தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் (27) என்பவர் முயன்றபோது, அவரும் தவறி பாதாளச் சாக்கடை குழிக்குள் விழுந்தார். உடனடியாக அவர்கள் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இருவரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், இருவரது உடலையும் உடற்கூராய்வுக்காக எடுத்துச் செல்லும் போது உறவினர்கள் திரண்டதால், டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதைத் தொடர்ந்து இருவரது உடல்களும் பரிசோதனைக்குப் பின், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து திருவாரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு, அரசு வேலை என வழங்கக் கோரி திங்களன்று திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு இறந்தவரின் சடலத்துடன் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.முருகையன், பொருளாளர் இரா.மாலதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி, தலைவர் ஜி.பழனிவேல், நகராட்சி துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் கிளைச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின், நிர்வாகத்தின் சார்பாக உடனடியாக ரூ.5 லட்சம் நிவாரணம் மட்டும் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.