tamilnadu

img

நாகை தலைமை மருத்துவமனையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகை தலைமை மருத்துவமனையில்  வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜுன் 27-  நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசினர் தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாலிபர் சங்கம் சார்பில், மாவட்டத் தலைவர் பி.எம். நன்மாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நாகப்பட்டினம் நகரப் பகுதியில் இருந்து அருகிலுள்ள ஒரத்தூர் ஊராட்சிக்கு கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்பு அரசினர் தலைமை மருத்துவமனை மாற்றப்பட்டது. 700 படுக்கை கொண்ட அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனை வளாகத்தில் அரசினர் மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. தற்போது மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறப்படுகிறது. மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதாக கூறுகின்றனர். மருத்துவமனையில், நோயாளிகளுக்கான இதர வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. மேலும், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட முக்கிய பரி சோதனைக்கான கருவிகள் இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வாலிபர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வாலிபர் சங்க மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மாவட்டச் செயலாளர் டி. அருள்தாஸ், மாவட்டப் பொருளாளர் என்.எம். பாலு ஆகியோர் கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார். விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.