tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

பள்ளியில் யோகா நிகழ்ச்சி

பாபநாசம், ஜுன் 21-  உலக யோகா தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.  உடற்கல்வி இயக்குநர் பாலச்சந்திரன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு சுரேஷ், உதவி தலைமை ஆசிரியர் காந்தி, பள்ளி மேலாண்மைக் குழு செங்குட்டுவன், உடற்கல்வி ஆசிரியர் செல்வக்குமார் உட்பட பலர் பேசினர். மாணவர்கள் சூர்ய நமஸ்காரம், உட்கட்டாசனம், ஏக பாதாசனம், தடாசனம், புஜங்காசனம், ஹாலாசனம், சர்வாங்கசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்து காட்டினர். என்.சி.சி அலுவலர் சரவணன் சர்வாங்சனம், கவுன்டின் ஆசனம், மகா ஆசனம், சிரசாசனம் செய்து காட்டினர்.

இல்லம் தேடி கல்வி  தன்னார்வலர்களுக்கு  ஒரு நாள் பயிற்சி

தஞ்சாவூர், ஜுன் 21-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வட்டார வள மையத்தில், இல்லம் தேடிக் கல்வி பயிற்சி சார்ந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 25 தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.  பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் எம்.கே. ராமமூர்த்தி, மனோகரன் முன்னிலையில், வட்டார வள மேற்பார்வையாளர் முருகேசன் துவக்கி வைத்து பயிற்சியின் நோக்கம் பற்றி கூறினார்.  பயிற்சியை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமதனலட்சுமி மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் அஞ்சலிதேவி ஆகியோர் பார்வையிட்டனர். பயிற்சியில், முதல் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது பற்றி எடுத்துக் கூறப்பட்டது. பயிற்சியின் கருத்தாளராக ஆசிரியர் பயிற்றுனர் சரவணன் செயல்பட்டார்.

மனிதநேய மக்கள் கட்சி  நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம், ஜுன் 21-  தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், பேரூர், ஒன்றிய  நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  பாபநாசத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரஹ்மத் அலி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரிபாயி கலந்து கொண்டனர்.  இதில், ஜூலை 6 அன்று மதுரையில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற விருக்கும் பேரணி மற்றும் மாநாட்டிற் கான பணி தொடர்பாகவும், மாவட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் பணி, செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.