tamilnadu

img

‘எதற்கும் துவளாத தோழர்கள்’

மதுரை, ஏப்.1- சிறுபான்மை மக்களை திட்டமிட்டு கட்டம் கட்டுகிறார்கள். அதற்கு ஒரு கவர்மெண்டே துணை போகிறது என்று ஒன்றிய பாஜக அரசை நடிகை ரோகிணி கடுமையாக சாடினார்.  மதுரையில் நடைபெற்ற சிபிஎம் மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படிப்பட்ட இயக்கம். அதை மனதில் எண்ணிப் பார்க்கும்போதும். கேட்ட போதும் படித்த போதும், எப்படிப்பட்ட போராட்டங்களை, எப்படிப்பட்ட தியாகங்களை ஆற்றியிருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மனதிற்குள்ளே ஒரு உத்வேகம் எழுந்தது. பள்ளி பாடப்புத்தகத்தில் சிறுவர்களுக்கு ஒரு சில தலைவர்கள் பற்றி மட்டுமே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஒரு சில பேர் போராடினால் மட்டும் சுதந்திரம் கிடைத்திருக்குமா?  ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு வீட்டிலிருந்தும், புரட்சியாளர்கள் வந்திருக்கிறார்கள். தன்னலமில்லாமல், ஓசையே இல்லாமல், விளம்பரமேயில்லாமல்  நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியிருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள். அந்த தியாகங்கள் எல்லாம் இப்பொழுது தான் மக்களுக்கும் எனக்கும் கூட தெரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக கிடைத்திருக்கிறது. சுதந்திர போராட்டக் காலம் போலவே இன்றும் நாம் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டிய ஒரு போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.

நமது பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சொன்னது உண்மையான வாக்கு. அது நாம் சுதந்திர இந்தியாவில் தான் இருக்கிறோமா என்ற ஒரு ஐயம் எழுகிறது. அது மாதிரியான நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. யார் படிக்க வேண்டும், யார் படிக்கக்கூடாது என்பதை மிக தீர்மானமாக செயல்படுத்தி வருகிறார்கள். நீ ஹிஜாப் போட்டிருக்கிறாயா? உனக்கு படிக்க உரிமை இல்லை என்று சொல்கிறார்கள். ஹிஜாப் போட்ட மாணவிகளை தேர்வு எழுதவிடாமல் செய்திருக்கிறார்கள். அந்த மாணவிகள் ஹிஜாப் அணிவது எங்களது உரிமை என்று தேர்வு எழுதவில்லை. இதற்கு எது தடையாக இருந்தது. பொருளாதாரம் அல்ல. படிக்க இயலாத நிலை இல்லை. ஹிஜாப் என்ற பெயரில் அந்த மாணவிகளின் எதிர்காலக் கனவை கலைத்துவிட்டார்கள். ஹிஜாப் அணிந்த சில மாணவிகளை தேர்வு எழுத அனுமதித்த ஆசிரியர்களை, மாணவிகள் எதிர்காலம் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக உறுதுணையாக நின்ற ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். நாங்கள் சொல்வது போல் நீங்கள் நடந்து கொண்டால் படிக்க முடியும் வாழ முடியும் என்கிறார்கள். மிகவும் கவனமாகக் கட்டம் கட்டி சிறுபான்மை மக்களை வளரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இதுக்கு ஒரு கவர்மெண்டே துணை போகிறது. கலை மூலமாக  இந்த மக்களுக்கு எது நல்லது என்று நாம்  எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது.  நமக்கு முன்னே இருக்கின்ற பாதை மிகக் கடுமையான பாதை. எவ்வளவு  போராடினாலும் துவண்டு போகாத தோழர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு தமிழ்நாடு ஒரு சான்று. சமீபத்தில் தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட ஆட்சி வேண்டும் என்பதை தீர்மானித்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் இப்படி இந்தியா முழுவதும் நடக்க வேண்டும், அதை எப்படி நிகழ்த்துவது. அதை ஆலோசனை செய்வதற்காகத்தான் இந்த மாநாடு. இப்படி ஒரு அரிய வாய்ப்பை எனக்கு தந்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ரோகிணி பேசினார்.