இன்றோ இளையவர் நீவீர் -நாளை
இந்நாட்டின் தலைவர்கள் ஆவீர்!
நின்றே மொழிவதைக் கேளீர்-நெஞ்சில்
நினைக்கும் வலிவுவரும் தோளில்!
கல்வியைக் கற்பதே நோக்கம்-வேறு
கலைகளும் கொணர்ந்தும்பால் சேர்க்கும்!
வெல்லவே எப்போதும் கற்பீர் -மனத்தில்
வேறொன்றும் இல்லாமல் நிற்பீர்!
சோம்பல் அறியாமை ஓடும் -தூக்கம்
துளியும் இலாதறிவை நாடும்!
ஆம்பல் நன்மைகள் சேரும் -நாளை
அழைத்துமைப் பாராட்டுமெவ் வூரும்!
பகுத்தறிந்து கொண்டாடும் வாழ்வு -உன்றன்
பக்கம்வந்து நில்லாதோடும் தாழ்வு!
மிகுத்துணர்ந்து செய்வாய் நல்தொண்டு -செய்யில்
மேன்மைகள் நிற்குமுனைக் கண்டு!
அறியாமைக்கு இலையங்கே வேலை!-வண்டு
அழைத்து மெச்சிடும் சோலை !
நெறியாக நிம்நெஞ்ச வானில்---ஒளி
நின்றிடும் அமுதூற்றுத் தேனில்!
வரலாற்றில் நிற்குமும் பேரும்-உம்மை
வாழ்த்தியே பெருமையாய்க் கூறும்
விரல்நீட்டும் பக்கமெலாம் சேரும் -மக்கள்
வியப்போடே பார்த்திட நேரும்!