tamilnadu

img

வரலாறு வாழ்த்தும்! - புலிகரம்பலூர் பொன்னையன்

இன்றோ இளையவர் நீவீர் -நாளை
 இந்நாட்டின் தலைவர்கள் ஆவீர்!
நின்றே மொழிவதைக் கேளீர்-நெஞ்சில்
 நினைக்கும் வலிவுவரும் தோளில்!

கல்வியைக் கற்பதே நோக்கம்-வேறு
 கலைகளும் கொணர்ந்தும்பால் சேர்க்கும்!
வெல்லவே எப்போதும் கற்பீர் -மனத்தில்
 வேறொன்றும் இல்லாமல் நிற்பீர்!

சோம்பல் அறியாமை ஓடும் -தூக்கம்
 துளியும் இலாதறிவை நாடும்!
ஆம்பல் நன்மைகள் சேரும் -நாளை
 அழைத்துமைப் பாராட்டுமெவ் வூரும்!

பகுத்தறிந்து கொண்டாடும் வாழ்வு -உன்றன்
 பக்கம்வந்து நில்லாதோடும் தாழ்வு!
மிகுத்துணர்ந்து செய்வாய் நல்தொண்டு -செய்யில்
 மேன்மைகள் நிற்குமுனைக் கண்டு!

அறியாமைக்கு இலையங்கே வேலை!-வண்டு
 அழைத்து மெச்சிடும் சோலை !
நெறியாக நிம்நெஞ்ச வானில்---ஒளி
 நின்றிடும் அமுதூற்றுத் தேனில்!

வரலாற்றில் நிற்குமும் பேரும்-உம்மை
 வாழ்த்தியே பெருமையாய்க் கூறும்
விரல்நீட்டும் பக்கமெலாம் சேரும் -மக்கள்
 வியப்போடே பார்த்திட நேரும்!