tamilnadu

img

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி மக்களின் எதிர்பார்ப்புகளை திஸா நாயக்க அரசு நிறைவேற்றும்

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி  மக்களின் எதிர்பார்ப்புகளை  திஸா நாயக்க அரசு நிறைவேற்றும்

இலங்கை மே தினப் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.சிந்து நம்பிக்கை

இலங்கையில் அமைந்துள்ள ஜேவிபி மற்றும் என்பிபி தலைமையிலான அனுர குமார திஸாநாயக்க அரசு, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது என்று ஏ.ஆர்.சிந்து கூறினார். இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) நடத்திய மே தினப் பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சிஐடியு அகில இந்திய செயலாளருமான ஏ.ஆர்.சிந்து பங்கேற்று உரையாற்றினார்.

அண்மையில் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்ற ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) தலைமைக்கு புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், “கடந்த ஆண்டு மே தினத்தன்று உங்கள் தலைமை, ஊழல் நிறைந்த (ராஜபக்சே குடும்ப) அரசின் கீழான கடைசி மே தின பேரணி இதுவென அறிவித்ததை நினைவுகூர்கிறேன். ஆறே மாதங்களில் நீங்கள் அதை நிறைவேற்றியுள்ளீர்கள்” என்றார். நவதாராளவாத முதலாளித்துவ நெருக்கடி உலகளாவிய நவதாராளவாத முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் சிக்கித் தவிப்பதை விவரித்த சிந்து, “முதலாளித்துவத்தின் கோட்டையான அமெரிக்காவில்கூட அதன் அமைப்புரீதியான நெருக்கடியிலிருந்து வெளிவர முடியாமல் திணறுகிறது. மனிதகுலத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முதலாளித்துவம் அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளது” என்றார். அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் இணைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உலக மக்களுக்கு துயரங்களை ஏற்படுத்தி வருவதாகவும், பாலஸ்தீனத்தில் காசா மற்றும் மேற்குக்கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார். இந்தியாவில் பாஜக ஆட்சியின் தாக்குதல்கள் இந்தியாவில் பாஜக தலைமையிலான அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஏ.ஆர்.சிந்து, “இந்தியா தற்போது மிகவும் நவதாராளவாத, ஏகாதிபத்திய சார்பு, வகுப்புவாத பாஜகவால் ஆளப்படுகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள் மற்றும்  பின்தங்கிய பிரிவினர் மீது இந்த அரசு மோசமான தாக்குதல்களை நடத்தி வருகிறது” என்றார். கேரளாவில் சிபிஐ(எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக ஒன்றிய அரசு அறிவிக்கப்படாத பொருளாதார முற்றுகையை மேற்கொண்டுள்ளதாகவும், சிறுபான்மையினர் மற்றும் இடதுசாரிகளை குறிவைத்து ஆர்எஸ்எஸ் வகுப்புவாத விஷத்தைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல் தொழிலாளர் உரிமைகள் மீதான மோடி அரசின் தாக்குதல்கள் குறித்து பேசிய அவர், “அரசாங்கம் தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு களைக் கொண்டுவந்துள்ளது. எட்டு மணிநேர வேலைநாள், குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது” என்றார். இந்நிலையில், மே 20ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு இடதுசாரி  தொழிற்சங்கங்கள் தலைமையிலான கூட்டு தொழிற்சங்க மேடை அழைப்பு விடுத்துள்ளதாகவும், இதற்கு விவசாயிகள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி ஓராண்டுக்கும் மேலாக நீடித்த இந்திய விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம், விவசாய எதிர்ப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியதை நினைவுகூர்ந்த சிந்து, “இந்தப் போராட்டம் தொழிற்சங்க இயக்கத்தின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒன்றுபட்ட நடவடிக்கைக்கான சூழலை உருவாக்கியது” என்றார். இலங்கையின் வெற்றி உத்வேகம் “இலங்கையில் கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் தெற்காசிய நாடுகளில் உள்ள தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கும் இடதுசாரிகளுக்கும் உத்வேக மளிக்கின்றன” என்று கூறிய ஏ.ஆர்.சிந்து, “கேரளா இலங்கை வழியில் செல்லும் என்று எங்கள் எதிரிகள் கூறியபோது, உங்கள் வெற்றிக்குப் பிறகு இலங்கை கேரளா வழியில் சென்றுள்ளது என்றும், இப்போது இந்தியா இலங்கை வழியில் சென்று நவதாராளவாத சக்திகளைத் தோற்கடிக்கும் என்றும் நாங்கள் பெருமையுடன் கூறினோம்” என்றார். சர்வதேச ஒற்றுமை பாலஸ்தீன மக்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திய அவர், “1967க்கு முந்தைய எல்லைகளுடன் கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்றார். 60 ஆண்டுகளுக்கும் மேலான பொருளாதார முற்றுகையைத் தொடர்ந்து எதிர்த்து வரும் சோஷலிச கியூபா மற்றும் கியூப மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய அவர், “டிரம்ப் ஆட்சியில், கியூபா, புதுப்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பை எதிர்கொள்கிறது. தொழிலாளர் வர்க்க சர்வதேசியத்தின் ஒரு பகுதியாக கியூபாவுடன் நிற்பது நமது கடமை” என்றார். உரையின் முடிவில், “சுரண்டல் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான உங்கள் போராட்டத்தில் இந்திய தொழிலாளர் வர்க்கம் எப்போதும் உங்களுடன் இருக்கும்” என்று உறுதியளித்த சிந்து, “மே தினம் வாழ்க! சோஷலிசம் வாழ்க! ஏகாதிபத்தியம் ஒழிக! உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற முழக்கங்களுடன் தனது உரையை நிறைவு செய்தார். ஜேவிபி மற்றும் என்பிபி தலைமையிலான புதிய இலங்கை அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்து தெரிவித்தார். இந்திய இடதுசாரி தலைவர்கள் கொழும்பு காலிமுகத் திடலில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த இந்த மாபெரும் மே தினப் பொதுக்கூட்டத்தில், திஸாநாயக்க அரசை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் ஜி.தேவராஜன் ஆகியோரும் உரையாற்றினர். ஜனாதிபதியுடன் சந்திப்பு முன்னதாக ஏ.ஆர்.சிந்து, பினோய் விஸ்வம், ஜி.தேவராஜன் ஆகிய மூன்று இந்திய இடதுசாரி தலைவர்களும் இலங்கை ஜனாதிபதியும் ஜேவிபி கட்சியின் தலைவருமான அனுர குமார திஸாநாயக்க மற்றும் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வா ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடினர்.