tamilnadu

img

திருச்சி விரைவு செய்திகள் 1

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியக்குழு அலுவலகமான தோழர் ஏ.கே.ஜி நினைவகம் திறப்பு விழா சனிக்கிழமை மாலை தோழர் ஏ.கே.ஜி நினைவு நாளில் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன் வரவேற்றார். கட்சியின் கொடியினை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஏற்றி வைத்தார். 

ஈச்சங்குடி கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஈச்சங்குடி கிராமம் மாசிமகா உற்சவ திருவிழா முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது  இந்த போட்டியில் மதுரை, திருச்சி,தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாட்டுவண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன. இதில் பெரியமாடு, கரிச்சான்மாடு, பூஞ்சிட்டு மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது, இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கினை நோக்கி, ஒன்றையொன்று முந்திச் சென்றன. போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரொக்கப்பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. பந்தய நிகழ்ச்சியில் சாலையின் இரு புறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர். ஆவுடையார்கோயில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நலிவுற்ற இஸ்லாமியர்களுக்கு  புத்தாடைகள் வழங்கும் விழா

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி, சிடி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ரமலான் விழாவில் நலிவுற்ற நிலையில் உள்ள இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் சிதம்பரம் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் அன்னம் சிதம்பரம் முன்னிலை வகித்தார். விழாவில் ஜமாத் நிர்வாகிகள் சரிப் முகம்மது, அப்துல்லா, காதர் இப்ராஹிம் மற்றும் கேசராப்பட்டி, பொன்னமராவதி இந்திரா நகர், திருக்களம்பூர், கரிசல்பட்டி பள்ளிவாசலைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். பள்ளி மாணவ மாணவியருக்கு ரமலான் சிறப்புகள் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.  விழாவில் பள்ளியின் செயல் அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அரசு மகளிர் விடுதிகளுக்கு  குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகள் 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து 10 அரசு மகளிர் விடுதிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை விடுதி காப்பாளினிகளிடம் வழங்கினார். மேலும், குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை (RO) விடுதிகளில் முறையாக பராமரித்து, தொடர்ந்து மாணவிகளுக்கு சுத்தமாக குடிநீர் வழங்கிட வேண்டும் என விடுதி காப்பாளினிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வைத்தியநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வி.வாசுதேவன், விடுதி காப்பாளினிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.