அவதூறு வார்த்தைகளை திரும்பப்பெறாவிட்டால் ஆட்சியருக்கு எதிராக போராட்டம் தொடரும்!
ஆசிரியர் சங்கத்தினர் திட்டவட்டம்
திருவள்ளூர், ஜூன் 2- ஆசிரியர்களை அவதூறாக பேசிய, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தனது கருத்தை திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் நடைபெறும் என ஆசிரியர் சங்கத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அரசுப்பள்ளி ஆசிரியர்களை அவ மதிக்கும் விதமான திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாபின் எதேச்சாதிகார போக்கை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் மண வாள நகர், கே.இ.என்.சி. அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து கொண்டு பணிக்கு வந்தனர். இதனால் பள்ளி வளாகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகள் சரியாக இருப்பது போலவும், ஆசிரியர்கள் மட்டும் தான் சரியில்லை என்ற தொணியில் ஆட்சியர் பேசிவிட்டு சென்றுள்ளார். பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, சமூகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் என மாணவர்களின் கல்வியை பாழ்படுத்தி வருகிறது. மேலும் அரசுப் பள்ளிகளில் போதிய அளவில் வகுப்புகள், கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் என பல்வேறு அடிப்படைவசதிகள் போதிய அளவு இல்லை. இப்படி ஏராளமான குறைபாடுகள் உள்ளன. இவற்றை சரிசெய்ய வேண்டும். மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாதம் தோறும் நடத்தப்படும் ஆய்வுக்கூட்டங்களை உரிய முறையில் நடத்தி மேம்படுத்தலாம். இதை யெல்லாம் விட்டு விட்டு, அண்மையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் திருத்தணியில் ஆய்விற்கு சென்ற போது, தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் என அனை வரையும் தகாத வார்த்தைகளில் பேசி, ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். ஆட்சியரின் ஏதேச்சதிகார போக்கை கண்டித்து ஆவடி உள்ளிட்டு மாவட்டம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிக்கு வந்தனர். ஆசிரியர்களை அவதூறாக பேசிய வார்த்தைகளை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் அடுத்து நடக்க உள்ள மாவட்ட அளவிலான ஆயத்த கூட்டத்தில் கலந்து பேசி, போராட்டம் நடத்த திட்டமிடப்படும் என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள். இரா.தாஸ், சா. ஞானசேகரன்,சே.பிர பாகரன், மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்கள் ஜவகர், காத்தவராயன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், ஷேக் கபூர், கணேசன், ராஜாஜி, பாலசுந்தரம் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.