(மலையாள சினிமா/2022/இயக்கம் கே.எம்.கமால்)
ஆயிரம் கைகள் கூடட்டும்;
ஆனந்த ராகம் பாடட்டும்;
நாளைய காலம் நம்மோடு;
நிச்சயம் உண்டு போராடு.
ஆதிவாசிகள் நிலச் சட்டத்தை எதிர்த்து பாலக்காடு மாவட்ட ஆட்சியகரத்தில் 1996இல் நக்சல் குழு நடத்திய சாகச நடவடிக்கையை பேசுகின்ற மலையாளப் படம்தான் “படா(PADA)”. கேரள அரசின் 1996 ஆம் ஆண்டில் ஆதிவாசிச் சட்டதிருத்தம், அவர்களை வனவாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த வகை செய்கிறது என்பதால் ஆதிவாசி மக்களின் போராட்டம் வெடிக்கிறது. அய்யன்காளி படா என்ற குழுவைச் சார்ந்த பாலு, அரவிந்தன், நாராயணன், ராகேஷ், உஸ்மான் இவர்களோடு கண்ணன் முண்டூர் ஆகியோர் அடங்கிய அறுவர் குழு; நாட்டின் கவனத்தை இப்பிரச்னையில் ஈர்க்கவும் அதிரடி நடவடிக்கை மூலம் அரசைப் பணிய வைத்து சட்டத்தை விலக்கிக் கொள்ளவும், இப்பிரச்னையைக் கையாள செயலில் இறங்குகிறது.இருவர் வெளியே கண்காணிப்பில் இருக்கிறார்கள். மற்றவர்கள் மனுக் கொடுக்கும் சாக்கில் மாவட்ட ஆட்சியரின் அறைக்குள் நுழைந்து துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளைக் காட்டி மிரட்டி, ஆட்சியரை அறையிலேயே பிணைக்கைதி ஆக்குகிறார்கள்.
இச்செய்தி நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பரபரப்புச் செய்தியாகிறது; அரசு பதறுகிறது; மின்னல் வேக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மத்திய அதிரடிப்படை பாலக்காடு விரைகிறது; தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் விரும்பத்தகாத விளைவுகளின்றி் இப்பிரச் சனையை வழியாற்ற அரசு தலைமைச் செயலரை, முதலமைச்சர் கோருகிறார். அரசுத்தரப்பில் அட்வகேட் ஜெயபாலன், மாவட்ட நீதிபதி தங்கப்பன் ஆச்சாரி் நியமிக்கப்படுகிறார்கள். இதனை நக்சல் குழு ஏற்கிறது. பேச்சுவார்த்தையில் ஆதிவாசி நிலச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை மட்டும் அதிரடிக் குழு முன்வைக்கிறது. சட்டசபைத் தீர்மானத்தின் பேரில்தான் சட்டத்தை ரத்து செய்ய முடியும் என்பதால் அரசுக்குத் தான் பரிந்துரைப்பதாக நீதிபதி உறுதியளிப்பதை நடவடிக்கைக் குழு ஏற்கிறது. பின்பு போராளிகள், துப்பாக்கி உள்ளிட்ட வெடிகுண்டு ஆயுதங்கள் ைத்திருப்பதை நீதிபதி அறிந்து, ஆட்சியரிடம், போராளிகளால் தாக்கப்பட்டீர்களா? எனக் கேட்கிறார். அதற்கு ஆட்சியர் தான் தாக்கப்படவில்லை என்றும், போராளிகள் தன்னை கௌரவமாக நடத்தினார்கள் என்றும், அதனால் போராளிகள் மீது புகார் தரவில்லை என்றும் கூறுகிறார். உடனே போராளிகள் நால்வரும், தாங்கள் வைத்திருப்பது பொம்மை துப்பாக்கி என்றும், நாட்டு வெடிகுண்டுகள் போல் தோற்றமளிக்கும் சாதாரண பிளாஸ்டிக் பைப்புகள் என்றும், அவற்றை பிரித்து நீதிபதியின் முன்பாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கிறார்கள். இந்நிகழ்வுகளை எல்லாம்,தொலைக்காட்சிகள்,செய்திப் பத்திரிகைகள் படம் பிடிக்கின்றன. காவல்துறை அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியர் புகார் தராமைக்கு, தங்கள் அளவில் கருத்து எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா? என நீதிபதி கேட்கிறார். எதுவும் இல்லை என்கிறார்கள். உடனே நீதிபதி நால்வரையும் விடுதலை செய்கிறார்.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு மறுநாளே, போலீஸ், போராளிகளான ஆறு பேர் மீதும் வேட்டையை துவக்குகிறது. வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைக்கும் நோக்கோடு போலீஸ் துரத்துகிறது. அறுவரும் ஓடுகிறார்கள்; ஓடுகிறார்கள்; ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில், போலீஸிடம் சிக்குகிறார்கள்.ஆனால் கடைசிவரை ஆதிவாசி நிலச்சட்டத்தை அரசு திரும்பப்பெற வில்லை. ஆதிவாசிகள் போராட்டமும் அரசின் அடக்கு முறையும் தொடர்ந்தபடி இருக்கிறது என்பதுடன் படம் முடிகிறது. பேச்சுவார்த்தைக்கு முன்பு போராளிகள் முகத்தில் அவ்வப்போது அச்ச உணர்வு நிழலாடும்.ஆனால் பேச்சு வார்த்தைக்குப் பின் மிகத் தெளிவுடனும் துணிவுடனும் இருப்பார்கள். இந்தச் சாகச நடவடிக்கைக்கு முன் நடந்து திரியும் போராளிகள் அதன்பின்னர் துரத்தப்பட்டு ஓடியபடி இருக்கிறார்கள். கால்தரித்து நிற்கமுடியவில்லை. அவர்களது வாழ்க்கை நிலைமையின் குறியீடு இது. போராளிகளாக நடித்துள்ள குன்ஜகோ போபன், ஜோஜு ஜார்ஜ், விநாயகன், டிலீஸ் போத்தன் கோபாலன் இன்ட்ரான்ஸ் ஆகிய அறுவரின் முக பாவனைகளும் உடல்மொழியும் அற்புதம். தலைமை செயலாளர் பாத்திரத்தை பிரகாஷ் ராஜ் திறம்படச் செய்து அசத்தியிருக்கிறார். எந்த வகையிலும் என்எஸ்ஜி பாலக்காடு வரக்கூடாது என்பதற்காக இதரபகுதி அதிகாரிகளை அணைத்துகொண்டு சாதுர்யமாக அவர் எடுக்கின்ற முயற்சிகள், டென்ஷன் ஆகாமல், உட்கார்ந்து கொண்டே, அலட்டிக் கொள்ளாத அவரது நடிப்பு சூப்பர்.
“காடு அழுது கேட்டி ருக்கிறீர்களா? காடு சிரித்து பார்த் திருக்கிறீர்களா?” என்ற பாடல், ஆதிவாசிகள், விலங்குகள் யாவும் காட்டின் உறவுகள்; அவர்களது துயரம் காட்டின் துயரம்; அவர்களது மகிழ்ச்சி காட்டின் மகிழ்ச்சி; என்ற செய்தியை நெஞ்சை நெகிழவைக்கும் வண்ணம் சொல்கிறது. அதன் குறியீடாக குழந்தைகள் ஆடிப்பாடிச் சிரித்து விளை யாடும் ஆரம்பக் காட்சிப் பின்னணியில் தாலாட்டு இசையாக ஒலிக்கும்.வனவாசிகள் வல்லடியாய் அப்புறப்படுத்தப்படும் இறுதிக்காட்சியில் இதே பாடல் ஒப்பாரியாகவும் ஒலிக்கும்.இசையமைப்பு கவித்துவமானது. மாவட்ட ஆட்சியராக நடித்துள்ள சந்தோஷ் கீழா, மாவட்ட நீதிபதியாக நடித்துள்ள சலீம்குமார்,அரசுத்தூதுவராக நடித்துள்ள டி.ஜி.ரவி உள்ளிட்ட ஒவ்வொருவரும் தான் ஏற்ற பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.
தலைமைச் செயலர், மாவட்ட நீதிபதி ஆகியோர் ஆட்சியரை நலம்விசாரிப்பர். அரசுக் கட்டமைப்புக்கு சிறிதும் பாதிப்பில்லை; என்பதன் குறியீடு இது. பேச்சுவார்த்தைக்குப் பின் போராளி பாலு, “கோரிக்கை எப்போது நிறைவேற்றப்படும்” என வினவும்போது நீதிபதி எள்ளலாகப் பார்ப்பார்.