தேர்தல் முடிந்ததும் தாக்குதலை ஆரம்பித்தது மோடி அரசு
புதுதில்லி,
மார்ச் 1 - வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நரேந்திர மோடி அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை, எரிவாயு விலையை உயர்த்தாமல் இருந்துவந்த மோடி அரசு, தற்போது தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாவதற்கு உள்ளேயே வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு விலையை சிலிண்டருக்கு 50 ரூபாயும், வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு விலையை சிலிண்டருக்கு 350 ரூபாய் 50 காசுகள் வரையும் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் சென்னையில், வீட்டுப் பயன்பாட்டு சமையல் சிலிண்டரின் விலை 1,118 ரூபாய் 50 காசுகளாகவும், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 2,268 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
வாக்களித்த மக்களுக்கு பரிசு(!?)
“சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதிச் செலவு, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்த்தப்படு கின்றன. அதையும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்புதான் செய்கின்றன. ஒன்றிய அரசுக்கு இதில் எந்த பங்கும் இல்லை” என்று மோடி அரசு கூறினாலும், அதில் உண்மையில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். சர்வதேசச் சந்தையில் எல்பிஜி விலை அதிகமாக இருந்தபோதும், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற 2021 நவம்பர், டிசம்பர் மற்றும் 2022 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒரு பைசா கூட எரிவாயு விலை உயர்த்தப்பட வில்லை. பெட்ரோல், டீசல் விலைகளும் உயர்த்தப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், 2022 ஜூலை 6-ஆம் தேதி எரிவாயு விலையை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தியது. இதன் விளைவாக ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1068 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்தது. அதன்பிறகு, 2022 டிசம்பரில் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதாக இருந்ததால், எந்த விலை உயர்வையும் மோடி அரசு அறிவிக்கவில்லை.
குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவடைந்த நிலையில், அடுத்த மாதமே மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும், பணவீக்கம் அதிகரித்த போதும் கூட, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் - டீசல் விலைகள் உயர்த்தப்படவில்லை. ஆனால், தற்போது மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்ட நிலையில், நரேந்திர மோடி அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை உயர்த்தி மக்களுக்கு பரிசு (!?) அளித்துள்ளது.
ஒன்றரை ஆண்டில் 303 ரூபாய் உயர்வு
கடந்த 17 மாதங்களில் மட்டும் வீட்டுப் பயன்பாட்டிற் கான சமையல் எரிவாயு விலையை, மோடி அரசு சிலிண்டர் ஒன்றுக்கு 303 ரூபாய் உயர்த்தி மக்களை வஞ்சித்துள்ளது. கடந்த 2021 ஜூலையில் வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 850 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. இதனை 2021 ஆகஸ்டில் 875 ரூபாய் 50 காசுகளாகவும், செப்டம்பரில் 900 ரூபாய் 50 காசுகளாக வும், இதனையே அக்டோபர் முதல் மார்ச் 2022 வரையிலான காலத்தில் 915 ரூபாய் 50 காசுகளாகவும், ஏப்ரலில் 965 ரூபாய் 50 காசுகளாகவும் அதிகரித்த மோடி அரசு, மே 7-ஆம் தேதி மேலும் 50 ரூபாயை உயர்த்தியது.
இதன்மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, முதன்முறையாக 1000 ரூபாயை (1,015 ரூபாய் 50 காசுகள்) தாண்ட வைத்து பிரதமர் நரேந்திர மோடி ‘சாதனை’ படைத்தார். அந்த மாதத்திலேயே மே 19-ஆம் தேதி மேலும் 3 ரூபாய் விலையை உயர்த்தி சிலிண்டர் விலையை 1,018 ரூபாய் 50 காசுகளாக்கினார். கடைசியாக 2022 ஜூலையில் 50 ரூபாய் விலை உயர்த்தினார். இதனால், 10 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற கடந்த 7 மாதங் களாக, ஒரு சிலிண்டர் 1068 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் இருந்து வந்தது. தற்போது 2023 மார்ச் 1 அன்று, 50 ரூபாய் விலை உயர்த்தி சிலிண்டர் விலையை முதன்முறையாக 1118 ரூபாய் 50 காசுகள் என்ற உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 418 ரூபாய் அளவிற்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி சாதனை படைத்துள்ளார். இது இந்திய ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில் பலத்த அடியாக அமைந்துள்ளது.
8 ஆண்டுகளில் 800 ரூபாய் உயர்த்திய மோடி
2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வரும்போது, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 410 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது. அதை கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 800 ரூபாய் அளவிற்கு நரேந்திர மோடி உயர்த்தியுள்ளார். அதுமட்டுமல்ல, நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, வீட்டுப் பயன்பாட்டு சமையல் சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாய் வரை மானியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா தொற்றுப் பரவல் காலத்தை ஒரு சாக்காக வைத்து, கடந்த இரண்டரை ஆண்டு களில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நரேந்திர மோடி கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டி விட்டார். ஒரு குடும்பமானது, ஆண்டொன்றுக்கு 14.2 கிலோ எடைகொண்ட 12 சமையல் எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் பெற முடியும். இந்த 12 சிலிண்டர்களுக்கு பாஹல் (PAHAL) திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு குறைந்தது ரூ. 300 முதல் அதிகபட்சம் 400 ரூபாய் வரை மானியம் வழங்கி வந்தது. இந்நிலையில், 2014-இல் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த மானியத்தை நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தின் (Direct Benefit Transfer of LPG -DBTL) கீழ், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவேன் என்று மோடி கூறினார்.
இதன்படி 2021-22 நிதியாண்டில் ஒன்றிய பாஜக அரசு ரூ. 37 ஆயிரத்து 256 கோடியே 21 லட்சத்தை சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு மானியத்திற்காக ஒதுக்கியிருந்தது. ஆனால், கடந்த 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் வெறும் 1,900 கோடி ரூபாயை மட்டுமே மானியத்திற்காக செலவழித்தது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் 8 கோடி பேருக்கு மானியம் அறிவிக்கப்பட்டாலும், விலை உயர்வு காரண மாக அவர்களிலும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் ஒரு தடவைக்குப் பிறகு சிலிண்டர்கள் நிரப்பவில்லை. இவர்கள் தவிர்த்து, எஞ்சியுள்ள சுமார் 16 கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு எரிவாயு மானியத்தை இல்லை என்றே கூறி விட்டது. அவர்களின் வங்கிக் கணக்குகளில் வெறும் 15 ரூபாய், 20 ரூபாய் என்ற அளவிலேயே மானியம் செலுத்தப்பட்டது. இதனால் அந்த 16 கோடி குடும்பங்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், மேலும் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் மீது மோடி அரசு மோசமான தாக்குதலைத் தொடுத்துள்ளது.