விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசிய முகாம் அலுவலரை மாற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம்
அரியலூர், ஏப்.24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இம்மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றும், கௌசர் என்பவர் முகாம் அலுவலராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களை, முகாம் அலுவலர் மரியாதை குறைவாக நடத்தி, மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், அரியலூர் மாவட்டத்தை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் அதிருப்தி அடைந்த விடைத்தாள் திருத்தும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து, ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது முகாம் அலுவலரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், அரியலூர் மாவட்டத்தை தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், முகாம் அலுவலர் கௌசர், போராட்டம் நடத்திய ஆசிரியர்களிடம், தம்முடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திருப்பினர்.
பாபநாசம் அருகே ஆதார் சிறப்பு முகாம்
பாபநாசம், ஏப்,24- பாபநாசம் அருகே, கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி புத்தூர், குடிகாட்டில் ஏப்.21 ஆம் தேதி தொடங்கி ஏப்.23 ஆம் தேதிவரை, மூன்று நாட்கள் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஆதாரில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பிழைத் திருத்தம், பயோ - மெட்ரிக் புதுப்பித்தல், புகைப்படம் புதுப்பித்தல், மொபைல் எண் மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. ஆதார் பதிவு அலுவலர் சரவணன், இசை அரசு ஆகியோர் நூறுக்குக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் ஆதார் பதிவை மேற்கொண்டனர். இதில் கோவிந்த நாட்டுச்சேரி முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், ஊராட்சி செயலாளர் முருகையன், ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.