சாதியை மதத்தை சாத்திரக் குப்பையை
சாடிய துறவி வள்ளலார்-அவர்
ஓதிய அருட்பா ஓதிட எங்கும்
ஒற்றுமை ஓங்கியே வாழலாம்!
வேதம் ஆகமம் இதிகாசம் புராணம்
வேண்டாம் என்றார் வள்ளலார்-அவை
சூதாய் பற்பலப் பொய்யைச் சொல்வதால்.
சுடர்விடும் அறிவினால் தள்ளலாம்!
மனித நேயம்,ஆன்ம நேயம்
மனதில் கொண்டவர் வள்ளலார்-அவர்
பிணித்த துன்பம் ஓரறிவு உயிர்க்கும்
பிறக்கா நிலைக்கே வாடினார்!
பசியால் அலைவோர் நேர்வரக் கண்டால்
பதறித் துடித்தவர் வள்ளலார் -அவர்
வசிக்கும் மக்கள் நோயால் துன்புற
வருந்தம் மேலிட வாடினார்!
கரையான் புற்றுக் களைந்திடக் கண்டே
கண்ணீர் விட்டவர் வள்ளலார்-அவர்
உரைத்த அருட்பா உயிரினைப் போற்றும்
உலகோர் அதனைக் கொள்ளலாம்!
ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் வேற்றுமை
ஒழிந்திடப் பாடினார் வள்ளலார்-அவர்
புத்தியில் சமதர்ம சோசலிசப் பார்வை
புதைந்து இருப்பதைக் காணலாம்!