tamilnadu

img

தேர்தல் அறிக்கை வெளியீடு பாஜகவின் கபட நாடகம் - கே.பாலகிருஷ்ணன் சாடல்

கே.பாலகிருஷ்ணன் சாடல் சிதம்பரம், ஏப். 14 - “சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினத்தில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டிருப்பதாக கூறுவது ஏமாற்று வேலை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,  கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்ற டாக்டர் அம்பேத்கரின் உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். நமது இந்திய அரசியல் சாசனத்தை ஒழித்துவிட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அதற்கான பணிகளை வெளிப்படையாக செய்து வருகிறது. மறுபுறத்தில், அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக பாஜக கூறிக்கொள்வது, நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகமே அன்றி வேறல்ல. இடஒதுக்கீடு என்ற கொள்கையே இருக்கக் கூடாது என்று கூறும் பாஜகவோடு சேர்ந்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளை தோற்கடித்து சிதம்பரத்தில் திருமாவளவனையும், கடலூரில் விஷ்ணு பிரசாத்தையும் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு சிபிஎம் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலத் துணைத் தலைவர் மூசா, நகர மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமார், ஒன்றியச் செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால. அறவாழி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.